மதுரைக்கு சட்டமன்றம்! திருச்சிக்கு டிஜிபி ஆஃபிஸ்! தமிழக அரசுக்கு கார்த்தி சிதம்பரம் யோசனை!
சென்னை: சென்னையில் நாளுக்கு மக்கள் நெரிசல் அதிகரித்து வரும் சூழலில் திமுக அரசுக்கு புதிய யோசனை ஒன்றை கூறியிருக்கிறார் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்.
தலைநகர் சென்னையிலிருந்து பெரும்பாலான துறைகளை தமிழகத்தின் மற்ற முக்கிய நகரங்களுக்கு மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே நகர்ப்புற பிரச்சனைகளுக்கு தீர்வு காண சரியான நேரம் வந்துவிட்டதாக தாம் கருதுவதாகவும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

சென்னை நெரிசல்
ஒருநாள் மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறும் சென்னை குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்து வரும் வேளையில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதன்படி சென்னையின் உட்கட்டமைப்பை மேம்படுத்த கடந்த 8 மாதங்களாக திமுக அரசு என்ன செய்தது என்ற விவாதமோ அல்லது 10 ஆண்டுகாலம் அதிமுக அரசு என்ன செய்தது என்ற விவாதமோ தேவையற்றது எனக் கூறியிருக்கிறார்.

இடமாற்றம் தீர்வு
நகர்ப்புற பிரச்சனைகளுக்கு தீர்வு காண சரியான நேரம் வந்துவிட்டதாக தாம் கருதுவதாகவும் தலைநகர் சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கக் கூடிய நிர்வாகத் துறைகளில் பெரும்பாலானவற்றை தமிழகத்தின் மற்ற முக்கிய நகரங்களுக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும் என அரசுக்கு யோசனை தெரிவித்திருக்கிறார். அதன்படி சென்னையில் இருந்து திருச்சிக்கு காவல்துறை தலைமையகத்தை மாற்ற வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.

நிர்வாகத்துறைகள்
அதேபோல் தொழில்துறை இயக்குநரகம் உள்ளிட்ட அத்துறையின் தலைமையகத்தை கோவைக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் சட்டமன்றத்தை சென்னையிலிருந்து மதுரைக்கு மாற்ற வேண்டும் எனவும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தனது டிவிட்டர் மூலம் தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்திருக்கிறார். மேலும், விவசாயத்துறையை தஞ்சாவூருக்கும், சுகாதாரத்துறையை சேலத்திற்கும், கல்வித்துறையை நெல்லைக்கும் மாற்ற வேண்டும் என கார்த்தி சிதம்பரம் புதிய யோசனை அளித்திருக்கிறார்.

இட நெருக்கடி
இதேபோல் அமைச்சரவையில் உள்ள மற்ற முக்கிய நிர்வாகத்துறைகளையும் தமிழகத்தின் மற்ற முக்கிய நகரங்களுக்கு மாற்ற வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். நகர்ப்புறமயமாதல் காரணமாக நாளுக்கு நாள் சென்னையில் இட நெருக்கடியும், ஜன நெருக்கடியும் அதிகரித்து வருவதால் கார்த்தி சிதம்பரத்தின் இந்த யோசனைக்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு கிடைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications