ரேஸ் ரோடு vs ரெய்ன் ரோடு.. மேயர் பிரியாவை சீண்டும் கார்த்தி சிதம்பரம் எம்பி! சர்ச்சை ட்வீட்
சென்னை: கூவம் நதி சீரமைப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி, அதில் எவ்வளவு செலவானது என்கிற விவரங்களை வெள்ளை அறிக்யைாக வெளியிட வேண்டும் என்று சென்னை மேயரிடம் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கேட்டிருந்தது சலசலப்பை கிளப்பியிருந்தது. இந்நிலையில், நேற்று பெய்த மழை காரணமாக சாலையில் தேங்கிய வெள்ளத்தை சுட்டிக்காட்டி அவர் போட்டிருக்கும் ட்வீட் மீண்டும் சென்னை மாநகராட்சியை சீண்டியிருக்கிறது.
சென்னையில் ஓடும் கூவம் நதி எதிர்பாராத அளவுக்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக சூழலியலாளர்கள் கூறி வருகின்றனர். எனவே இதனை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியை 'சென்னை நதிகள் சீரமைப்பு' அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் கோடி கணக்கில் இதற்கு சென்னை மாநகராட்சி நிதி ஒதுக்கி வருகிறது. ஆனால், இது வரை கூவம் நதியின் சூழலியலில் எந்த பெரிய மாற்றமும் ஏற்படவில்லை.

இந்த விவகாரம் குறித்த சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்திலும் கேள்விகள் எழப்பப்பட்டுள்ளன. இதற்கு மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார். ஆனால், இந்த விளக்கம் தெளிவாக இல்லையென்றும், முழுமையான விளக்கத்தை வௌ்ளை அறிக்கையாக வெளியிட வெண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியிருந்தார். இது குறித்து பிரியாவுக்கு கடிதம் எழுதிய அவர், அக்கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.
கூட்டணி கட்சியின் எம்பி ஒருவர், வெள்ளை அறிக்கை கேட்டு கடிதம் எழுதியதும், அதை பொதுவெளியில் பகிர்ந்ததும் விவாதங்களை கிளப்பியிருந்தது. கார்த்தி சிதம்பரம் கொஞ்சம் ஓவராகத்தான் போகிறார் என்று உடன் பிறப்புகள் விமர்சிக்க தொடங்கின.
இந்த சலசலப்புகள் ஓய்வதற்கு முன்னரே தற்போது சென்னை மாநகராட்சியை மீண்டும் சீண்ட தொடங்கியுள்ளார் கார்த்தி சிதம்பரம். அதாவது, நேற்று சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோயம்பேடு, வடபழனி, வில்லிவாக்கம், அண்ணா நகர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ஆவடி, அம்பத்தூர் என பரவலான இடங்களில் நேற்று இரவு மழைநீர் தேங்கியிருந்து.
இது தொடர்பான புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த கார்த்தி சிதம்பரம், 'Race Road vs Rain Road' என்று குறிப்பிட்டு, சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் கணக்கை டேக் செய்திருக்கிறார்.

மழை பெய்யும் நேரங்களில் சாலைகளில் நீர் தேங்குவது இயல்புதான். மழை நின்றதும் ஓரிரு மணி நேரங்களில் வெள்ளம் முழுமையாக வடிந்துவிடும். சுரங்க பாதைகள், மெட்ரோ வேலை நடைபெற்று வரும் பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் இதுதான் நிலைமை. ஆனால் இதை கூட புரிந்தக்கொள்ளாமல் கார்த்தி சிதம்பரம் ட்விட் போட்டு பிரச்னையை கிளப்புகிறாரே என்று மீண்டும் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர் உடன் பிறப்புகள்.
முன்னதாக சென்னையில் F4 கார் பந்தயம் நடத்த திட்டமிட்டபோது, மழை வரும் என்றும், பந்தய ரோடுகள், மழை ரோடுகளாக மாறும் என்றும் எதிர்க்கட்சியினர் சோஷியல் மீடியாக்களில் கலாய்த்து தள்ளியிருந்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இப்போது கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பது மேற்குறிப்பிட்ட விமர்சனங்களுக்கு ஒப்பானது என்றும் உடன் பிறப்புகள் கூறி வருகின்றனர். முதலில் மேயர் பிரியா, இப்போது சென்னை மாநகராட்சி, அடுத்து யாரை விமர்சிக்க போகிறார் கார்த்தி சிதம்பரம்? என்றும் திமுவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications