கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! இனி ஓராண்டுக்கு ஜாமீன் கிடைக்காது! கமிஷனர் உத்தரவு
சென்னை: ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான பரிந்துரையை காவல் துறை ஆணையர் சஞ்தீப் ராய் ரத்தோர் செய்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி மதியம் ஒருவர் பெட்ரோல் வெடிகுண்டை வீசினார். அவரை போலீஸார் மடக்கி பிடித்த போது அவர் சரித்திர குற்றவாளி கருக்கா வினோத் என தெரியவந்தது. நீட் தேர்வை ரத்து செய்ய ஆளுநர் மறுப்பதால் பெட்ரோல் குண்டை வீசியதாக வினோத் போலீஸ் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருக்கா வினோத் யார் என்பது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 21 ஆம் தேதி புழல் சிறையில் ஜாமீனில் வெளியே வந்த கருக்கா வினோத், அதே நேரத்தில் ஜாமீனில் வெளியே வந்த பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருடன் வந்தார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானது. எனவே கருக்கா வினோத்திற்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் என்ன தொடர்பு? பலமுறை சிறை சென்ற கருக்கா வினோத்தை சிறையிலிருந்து ஜாமீனில் எடுத்தது யார், அவருக்கு தேவையான நிதியுதவிகளை வழங்குவது யார் போன்ற விவரங்களை என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில்தான் புழல் சிறைத் துறை விளக்கம் அளித்திருந்தது. இதுகுறித்து சிறைத் துறை கூறியிருப்பதாவது: புழல் சிறையில் இருந்த போது கருக்கா வினோத் இருந்த பிளாக் வேறு. அது போல் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா வழக்கில் கைதான நபர்களின் பிளாக் வேறு. சிறையில் வெவ்வேறு பிளாக்குகளை சேர்ந்த இரு தரப்பும் சந்தித்திருக்க வாய்ப்பில்லை.
கருக்கா வினோத் சிறையில் இருந்த நாட்களில் அவரை சந்திக்க குடும்பத்தினரோ, உறவினர்களோ மற்றவர்களோ வந்ததாக பதிவுகளில் இல்லை. ஜாமீனில் வெளியே வருபவர்களும், வழக்கிலிருந்து விடுவிக்கப்படுபவர்களும் பரிசோதனை செய்து ஒரே நேரத்தில் வெளியே அனுப்புவது வழக்கம் என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து தமிழக காவல் துறையும் ஆளுநர் மாளிகை வட்டாரங்களும் வெவ்வேறு விஷயங்களை கூறி வருகிறார்கள். இந்த நிலையில் கருக்கா வினோத் இன்றைய தினம் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த புழல் சிறையிலிருந்து இன்று அழைத்து வரப்பட்டார். அப்போது பலத்த பாதுகாப்புடன் வந்த அவர் போலீஸ் வேனில் இருந்து இறங்கியதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகளாக சிறையில் உள்ள குற்றவாளிகளை நன்னடத்தையின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என முழக்கமிட்டார். மேலும் ஆளுநர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டை வீசியது நான்தான் என தெரிவித்தார்.
அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த நிலையில் கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பரிந்துரை செய்தார்.












Click it and Unblock the Notifications