முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளில்.. கருணாநிதி நினைவிட அலங்காரத்துடன் கவனம் பெற்ற வாசகம்..என்ன தெரியுமா?
தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவரது தந்தையான கருணாநிதியின் நினைவிடம் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் தான் பிறந்தநாளையொட்டி அவரது தந்தையும், மறைந்த முதல்வருமான கருணாநிதியின் நினைவிடம் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதில் முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ள வாசகங்கள் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
தமிழ்நாடு முதல்வராகவும், திமுக தலைவராகவும் செயல்பட்டு வரும் முக ஸ்டாலினுக்கு இன்று பிறந்தநாளாகும். அவர் 69 வது அகவையில் இருந்து இன்று 70 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
இவரது பிறந்தநாளை திமுக நிர்வாகிகள் சில நாட்களுக்கு முன்பிருந்தே கொண்டாட தொடங்கி உள்ளனர். மேலும் பிறந்தநாளையொட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட திமுகவினர் முடிவு செய்துள்ளனர். நலத்திட்ட உதவிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கருணாநிதி நினைவிடம் அலங்காரம்
இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது தந்தையும், மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவிடம் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் பற்றி பெருமையாக வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.

திராவிட நாயகன்
அதன்படி கருணாநிதி நினைவிடத்தில், ‛‛மார்ச் 1 திராவிட பொன்நாள்'' என எழுதப்பட்டுள்ளது. இதில் திராவிட என்பது கருப்பு நிறத்திலும், பொன்நாள் என்பது சிவப்பு நிறத்திலும் திமுகவின் கொடியை குறிக்கும் வகையில் உள்ளது. மேலும் அதனருகே முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 70 என எழுதப்பட்டுள்ளது.

முயற்ச்சி.. முயற்ச்சி..
இதுமட்டுமின்றி நினைவிடத்தின் மையப்பகுதியில், ‛‛முயற்ச்சி.. முயற்ச்சி.. முயற்ச்சி.. அதுதான் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் '' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் என்பது திமுகவின் கொடியை குறிக்கம் வகையில் கருப்பு, சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டுள்ளது.

இணையதளத்தில் பரவும் படம்
தற்போது இதுதொடர்பான படங்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளன. பொதுவாக கருணாநிதி நினைவிடத்தில் முக்கிய நாட்களில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வாசகங்கள் எழுதப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதற்கு முன்பும் கூட ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றபோது கருணாநிதி நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அவரை வரவேற்று வாசகம் எழுதப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications