இப்படியோர் நினைவிடம் வாய்க்குமென்றால் எத்தனை முறையும் இறக்கலாம்.. வைரமுத்து
சென்னை: இப்படியோர் நினைவிடம் வாய்க்குமென்றால் எத்தனை முறையும் இறக்கலாம் என்று மெரீனாவில் கருணாநிதி நினைவிடம் குறித்து வைரமுத்து கூறியுள்ளார். கலைஞர் கண்டிருந்தால் கவிதை பாடியிருப்பார் என்றும் வைரமுத்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி, கடந்த 2018 ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். அவரது உடல் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தார். கடந்த 2021ஆம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் சட்டசபை விதி எண் 110ன் கீழ் மெரினா கடற்கரையில் அண்ணாதுரை நினைவிட வளாகத்தில் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.
தமிழக அரசு சார்பில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நவீன விளக்கப்படங்களுடன் இந்த நினைவிடம் அமைக்கப்பட இருக்கிறது. இதன் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் தற்போது முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. கருணாநிதியின் சாதனைகளை கூறும் நினைவிட முகப்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்தன் அடையாளமாக உதயசூரியன் போன்று முகப்பில் கலைஞர் நினைவிடத்தில் 3 வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளும் நடைப்பெற்று முடிந்துள்ள நிலையில் இன்றைய தினம் நினைவிடம் திறக்கப்பட உள்ளது.
திமுக தொண்டர்களுக்கு பொக்கிஷமாகவும் பல்வேறு சிறப்புகள் கொண்டதாகவும் இருக்கிறது கருணாநிதி நினைவிடம். அந்த நினைவிடத்திற்கு சென்றிருந்த கவிஞர் வைரமுத்து தனது அனுபவங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கலைஞர் நினைவிடம்
கண்டு சிலிர்த்தேன்
கலைஞரின்
கையைப் பிடித்துக்கொண்டே
கலைஞர் நினைவிடம்
சுற்றிவந்த உணர்வு
இது தந்தைக்குத்
தனயன் எழுப்பிய மண்டபமல்ல
தலைவனுக்குத்
தொண்டன் கட்டிய தாஜ்மஹால்
"இப்படியோர் நினைவிடம்
வாய்க்குமென்றால்
எத்தனை முறையும் இறக்கலாம்"
கலைஞர் கண்டிருந்தால்
கவிதை பாடியிருப்பார்
உருவமாய் ஒலியாய்
புதைத்த இடத்தில்
கலைஞர் உயிரோடிருக்கிறார்
உலகத் தரம்
நன்றி தளபதி
என்று பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.












Click it and Unblock the Notifications