கருணாநிதியின் அன்பைப் பெற்றவர்.. ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர்.. கே.எஸ். அழகிரி
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் அன்பைப் பெற்றவர், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர் என்று பல பின்புலத்துடன் உள்ளவர் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ். அழகிரி.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அடுத்து யார் என்ற பேச்சு அடிபட்டபோதெல்லாம் ப.சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ் என பலருடைய பெயர்கள்தான் அடிபட்டு வந்தன. அதில் ப.சிதம்பரத்தின் பெயர் முன்னணியில் இருந்தது. ஆனால் தேசிய அளவில் பல முக்கிய பொறுப்புகளில் தான் இருந்து வருவதால் மாநிலத் தலைவர் பதவியை வேண்டாம் என்று ப.சிதம்பரம் கூறி விட்டதாக தகவல்கள் வந்தன.

இந்த நிலையில்தான் அவரது தீவிர ஆதரவாளரான கே.எஸ். அழகிரி தலைவராகியுள்ளார். இவர் தீவிர ப.சிதம்பரம் ஆதரவாளர் என்பதைத் தவிர மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களும் உள்ளன இவரைப் பற்றி. கட்சி சார்பற்று, பல்வேறு கட்சிகளிலும் இவருக்கு நல்ல அபிமானிகள் உள்ளனர். குறிப்பாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதி.
மதுரை அழகிரியா, கடலூர் அழகிரியா என்று கருணாநிதி சிரித்துக் கொண்டே கேட்பாராம். அந்த அளவுக்கு கருணாநிதியின் அன்பைப் பெற்றவர் அழகிரி. மதுரை அழகிரியுடனும் இவருக்கு நல்ல நெருக்கம் உண்டு. மதுரை அழகிரியை விட வயதிலும் குறைந்தவர்தான்.
விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான அழகிரிக்கு சொந்த ஊர் கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் கிராமம்தான். இவருக்கு மனைவி, ஒரு மகன், 5 மகள்கள் உள்ளனர். ப.சிதம்பரம் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர். சிதம்பரம் தொகுதியில் 2009ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தமிழக சட்டசபையில் 2 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள அழகிரி, தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பொறுப்பு ஒன்றுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். ப.சிதம்பரத்தின் பிரதிநிதியாக தமிழக காங்கிரஸ் கட்சியை வழி நடத்துவாரா அல்லது புதிய பாதையில் நடைபோட்டு புதிய வரலாறு படைப்பாரா.. கோஷ்டிப் பூசலை எப்படி சமாளிப்பார் என்று அழகிரி மீது நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications