பொறுமை காத்து பொங்கிய கருணாஸ்.. அப்போ இரட்டை இலை.. இனி உதயசூரியன்?.. அங்கேயும் "சிங்கிள்" தானாமே
சென்னை: திமுக கூட்டணியில் இணைய கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அக்கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்க திமுக ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை கருணாஸ் தரப்போ திமுக தரப்போ இன்னமும் உறுதி செய்யவில்லை.
நகைச்சுவை நடிகரான கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை உருவாக்கி அச்சமூக மக்களின் நன்மைக்காக பாடுபட்டு வருகிறார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தார்.
அவருக்கு திருவாடாணை தொகுதியை ஒதுக்கிய ஜெயலலிதா, இரட்டை இலை சின்னத்தில்தான் முக்குலத்தோர் புலிப்படை போட்டியிட வேண்டும் என்றார். இதை கருணாஸ் ஒப்புக் கொண்டு போட்டியிட்டு வென்றார்.
தினகரன் தரப்பு
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, தினகரன் தரப்பு, சசிகலா தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என அனைவருடனும் நட்பு பாராட்டி வந்த கருணாஸ், அண்மைக்காலமாக அமைதியாக இருந்தார். ஆனால் தங்கள் சமூக மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற ஒப்புக் கொள்ளும் கட்சியுடன் கூட்டணி என கருணாஸ் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
எம்பி சீட்டு
தான் எம்எல்ஏ, எம்பி சீட்டுகளுக்காக கட்சி நடத்தவில்லை. என் சமூக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவே கட்சி நடத்துவதாகவும் கருணாஸ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதிமுக சார்பில் கருணாஸை பேச்சுவார்த்தை அழைக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் கருணாஸின் கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை என்றே தெரிகிறது.
வெளிப்படையாக அறிவிப்பு
இதனால் கருணாஸ் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இன்றைய தினம் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக வெளிப்படையாக அறிவித்துவிட்டார். இவர் நேற்றைய தினம் திமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேச்சுவார்த்தை
நேற்றை தினம் தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் கருணாஸ் கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்குவதாகவும் உதயச்சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என திமுக கோரியதாகவும் தெரிகிறது. இந்த டீலை ஏற்ற கருணாஸ் இன்றைய தினம் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளார்.
கருணாஸ் என்ன செய்வார்
திமுகவுடனான தொகுதி பங்கீட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட திங்கள்கிழமை அண்ணா அறிவாலயத்திற்கு கருணாஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் தங்கள் சமூக மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் ஸ்டாலின் பார்வைக்கு கொண்டு செல்லுமாறு கருணாஸ் கொடுத்தாகவும் தெரிகிறது.