மக்களுக்கு பிரச்சனை எனில்.. அவர்களை சந்திக்கிறவன்தான் தலைவன்! பயந்து ஓடுகிறவர்கள் அல்ல! - கருணாஸ்
சென்னை: "மக்களுக்கு பிரச்சனை என்றால், யுத்த களமாக இருந்தாலும் உடனே அவர்களை சென்று சந்திக்கிறவன் தான் உண்மையான தலைவன். பயந்து ஓடுகிறவர்கள் என்றைக்கும் தலைவர்கள் ஆக முடியாது" என தமிழக வெற்றிக் கழத்தின் தலைவர் விஜய்யை கருணாஸ் விமர்சித்திருக்கிறார்.
திருவள்ளூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் இவ்வாறு பேசியிருக்கிறார். மேலும் அவர் பேசியதாவது, "இந்த கூட்டத்திற்கு நான் நடிகனாக வரவில்லை. என்னை நடிகன் என்று அடையாளப்படுத்திக் கொண்டாலும், எடுத்த எடுப்பிலேயே நான் நடிகனாக உருவாக்கி விடவில்லை.

மேடை பாடகனாகவும், கிராமிய பாடகனாகவும், கானா பாடகனாகவும், தமிழின் முதல் பாப் இசை பாடகனாகவும், அதன் பின்னர் நந்தா எனும் திரைப்படத்தில், லொடுக்கு பாண்டி என்கிற கதாபாத்திரத்தின் மூலம் நடித்து, இறுதியாக என்னை தனி அடையாளப்படுத்தும் விதமாக, திண்டுக்கல் சாரதி எனும் திரைப்படத்தில் நடித்து நடிகனாக உருவெடுத்தேன்.
இத்தனை கதாபாத்திரங்களை கடந்த பின்னர், திருவாடானை தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து, ஏறத்தாழ 1980க்கு பிறகு அதிமுகவை அங்கு ஜெயிக்க வைத்தேன்.
இத்தனை கதாபாத்திரங்களை கடந்து வந்த நான் யார்? என்னை போன்ற எண்ணற்ற கலைஞர்களை வாழவைப்பது நீங்கள்தான். ரூ.200 கோடி சம்பளம் வாங்குறேனா! ரூ.20 லட்சம் வாங்குறேனா? என்பது பிரச்சனையல்ல. அதை கொடுப்பது நீங்கள்தான். ஒரு உண்மையான கலைஞன் வாய்ப்புகளை தேடுவதை விட, வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நான் இதுவரை எந்த தயாரிப்பாளர் வீட்டிலும் வாய்ப்புக்காக போனது கிடையாது.
சாதாரண நாட்டுப்புற நடன கலைஞர்கள் கூட, அவர்களாக வாய்ப்புகளை தேடி போக மாட்டார்கள். அவர்களை நாம்தான் நேரில் சென்று புக் செய்ய வேண்டும். அதுதான் கலைக்கான மரியாதை.
அரசியலை பொறுத்தவரை, மக்களுக்கு துயரம் என்கிறபோது அந்த இரவில், இவ்வளவு வயதிலும் மக்களை நேரில் சென்று சந்தித்தாரே அவர்தான் உண்மையான தலைவன். மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் யுத்தக்களமாக இருந்தாலும் உடனே அவர்களை சென்று சந்திக்கிறவன் தான் உண்மையான தலைவன். பயந்து ஓடுகிறவர்கள் என்றைக்கும் தலைவர்கள் ஆக முடியாது" என்று பேசியிருக்கிறார்.
கரூரில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நேரத்தில், திருச்சி விமான நிலையத்திலிருந்து விஜய் அவசரமாக சென்னைக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தார். மக்களின் பலி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனால், அதற்கு பதிலளிக்காமல் விஜய் சென்றுவிட்டார். மறுபுறம் நள்ளிரவு கடந்தும் முதலமைச்சர் கரூருக்கு வந்து, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். இந்த விவகாரத்தைதான் கருணாஸ் கூறியிருப்பதாக விவாதங்கள் எழுந்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications