மன்னர் ராஜராஜ சோழனை பற்றி சர்ச்சை பேச்சு.. இயக்குனர் ரஞ்சித்துக்கு கருணாஸ் எச்சரிக்கை
சென்னை: ராஜராஜ சோழன் குறித்து பிழையானவற்றை பேசுவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இது அறிவுரை கலந்த எச்சரிக்கை என்று நடிகரும், சட்ட மன்ற உறுப்பினருமான கருணாஸ் கூறியுள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுளள கருணாஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனர் தலைவர் உமர்பாரூக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டம் கடந்த 5ம் தேதி இரவு நடந்தது. இதில், திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் பேசுகையில்,
ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் ஆதிதிராவிட மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. அவரது ஆட்சிக்காலத்தை பொற்காலம் என்பார்கள். அது உண்மையல்ல. ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் இருண்ட காலம் என்று கூறினார்.
சர்ச்சைப் பேச்சு.. பாயும் வழக்குகள்.. கைதுக்கு பயந்து முன்ஜாமீன் கோரி இயக்குநர் பா.ரஞ்சித் மனு!
கடும் எதிர்ப்பு
தமிழகத்தில் சாதிக்கொடுமைகள் அதிகம் நிகழ்ந்தது தஞ்சை மாவட்டத்தில் தான். எனவே ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்கிறோம். சாதி ரீதியாக மிகப்பெரிய ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது ராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில் தான். 400 பெண்களை விலைமாதர்களாக மாற்றி மங்களவிலாஸ் என வைத்து கொண்டு மிகப்பெரிய அயோக்கியத்தனம் செய்தார்கள் என்றும் பேசினார். இயக்குனர் ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கருணாஸ் கண்டனம்
இந்தநிலையில், இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள எம்.எல்.ஏ கருணாஸ், அறிக்கையில் கூறியிருப்பதாவது: எங்கள் நிலங்களை பறித்தார். பார்ப்பனர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். பெண்களை வேசியாக்கினார். இப்படி வரலாறு தெரியாத கட்டுக்கதைகளெல்லாம் உங்கள் தேவைகளுக்கு ஓர் மாபெரும் இன வரலாற்றை கொச்சைப்படுத்தாதீர்கள்.
கதைவிடாதீர்கள்
உங்களை போல் முன்னோரின் வரலாற்றை கற்காமல் கதைவிடாதீர்கள். இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். தமிழ்ப் பேரரசன் இராசராசச்சோழன் என்பவன் இந்தப் பூமிப்பந்தின் மனித அதிசயம். தமிழர் மரபின் உச்சம். நீங்களும் இந்த தமிழர் இனத்தில் பிறந்தவன் என்று பெருமைபட்டுக் கொள்ளுங்கள்.
அறிவுரை கலந்த எச்சரிக்கை
அதைவிடுத்து பார்ப்பனர்களின் பங்காளியை போல் எதிர்வரிசையில் நின்று கொக்கரிக்காதீர். தமிழர் முன்னோர்களின் வரலாறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். பிழையானவற்றை பேசுவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இது அறிவுரை கலந்த எச்சரிக்கை என்று கூறியுள்ளார்.
முன்ஜாமீன் கோரி மனு
இதனிடையே, தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் போலீசார், இயக்குனர் ரஞ்சித் மீது மதச்சண்டையை தூண்டுவது, கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்படுவதை தவிர்க்க, முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இயக்குநர் பா.ரஞ்சித் மனு தாக்கல் செய்துள்ளார்.
பா.ரஞ்சித் தரப்பில் விளக்கம்
அதே நேரம், வரலாற்று தகவலின் அடிப்படையிலேயே பேசினேன்; எனது கருத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். எனது பேச்சு எந்த சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல என்று இயக்குநர் பா.ரஞ்சித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.