கரூர் நெரிசல் சம்பவம்.. சிபிஐ அதிரடி! புஸ்சி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமாருக்கு நேரில் ஆஜராக சம்மன்
கரூர்: கருர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. நாளை மறுநாள் கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டம் நடந்தது. இதில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டது. உடனடியாக சிறப்பு விசாரணைக்குழு தனது விசாரணையை தொடங்கியது. கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன் ராஜ் ஆகியோர் கரூர் டவுன் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தவெக பொதுச்செயலாளர், புஸ்சி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில் இருவரும் கைது ஆவதை தவிர்க்க தலைமறைவாகினர். இதற்கிடையே, சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தவெக சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் கண்காணிப்பு குழுவையும் அமைத்தது. இந்தக் குழுவில் தமிழக கேடரை சேர்ந்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்கவும் உத்தரவிட்டது.
மேலும், புலன்விசாரணை குறித்த மாதாந்திர முன்னேற்ற அறிக்கையை கண்காணிப்பு குழுவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அளிக்க வேண்டும். சி.பி.ஐ. தாக்கல் செய்யும் மாதாந்திர முன்னேற்ற அறிக்கையை கண்காணிப்பு குழு சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனைக்கு தேவைப்படும் பட்சத்தில் தாக்கல் செய்யும். புலன்விசாரணையை சட்டப்படி குறிக்கப்பட்ட நேரத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
புஸ்சி ஆனந்த் நேரில் ஆஜராக உத்தரவு
உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து சிபிஐ இந்த வழக்கு விசாரணையை கையில் எடுத்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக கரூர் நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை விவரங்களையும் சிபிஐ தாக்கல் செய்தது. இந்த முதல் தகவல் அறிக்கையில் ஏ1 ஆக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், ஏ2 வாக புஸ்சி ஆனந்த, ஏ3 ஆக நிர்மல் குமார் ஆகியோர் பெயர்கள் சேர்க்கப்பட்டு இருந்தன.
வழக்கு விசாரணையை சிபிஐ விரைவாக நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார் ஆகிய இருவருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. நாளை மறுநாள் (அக்டோபர் 28) நேரில் ஆஜாரகி விளக்கமளிக்க வேண்டும் என்று சிபிஐ சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினரை சந்திக்கும் விஜய்
கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் திங்கள் கிழமை சந்திக்க உள்ளார். மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இதற்காக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கரூரில் இருந்து தனியார் பேருந்துகளில் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.
நாளை காலை விஜய், தனித்தனியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை புஸ்சி ஆனந்த் உள்பட தவெக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில்தான், கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்க அளிக்க இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications