தவெக தலைவர் விஜய்யின் அரசியலை நிர்ணயிக்கும் 4 பேர்.. நெருங்கிய பாஜக தொடர்பு.. அடுத்தது என்ன?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை சுற்றி இருக்கும் 4 முக்கிய நிர்வாகிகளும் பாஜகவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றுள்ள நிலையில், விரைவில் தவெகவின் மற்ற நிர்வாகிகளும் பாஜக பக்கம் சாய்வார்கள் என்று பார்க்கப்படுகிறது.
தவெக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. கரூர் சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின் தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கரூர் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்காமல், சிஎம் சார்.. பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமிருந்தால், என் மீது கை வையுங்கள்..

அவர்கள் மீது கை வைக்காதீர்கள்.. விரைவில் கரூரில் சந்திப்பேன் என்று தெரிவித்தார். விஜய்யின் வீடியோ திமுக மீது வெறுப்பில் இருந்து தவெக தொண்டர்களை தூண்டிவிடும் வகையில் அமைந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதன்பின் விஜய் இதுவரை என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகி இருக்கிறார்.
இன்னொரு பக்கம் சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் புஸ்ஸி ஆனந்த் இருவரும் முன் ஜாமீன் கோரி நீதிமன்றம் வரை சென்றுள்ளனர். தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா திடீரென தனி விமானம் மூலமாக டெல்லி பயணிக்கிறார். ஆதவ் அர்ஜுனாவின் டெல்லி பயணம் தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
இதனிடையே விஜய்யை சுற்றி இருக்கும் 4 நிர்வாகிகள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. ஏனென்றால் சிடிஆர் நிர்மல் குமார் பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்திருந்தாலும், அவரின் தொடக்கம் ஆர்எஸ்எஸ் இயக்கம் தான். இதனை சிடிஆர் நிர்மல் குமார் பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார். இதன் மூலமாக நீதிபதியை அவரின் வீட்டிலேயே சென்று சிடிஆர் நிர்மல் குமாரால் சந்திக்க முடிந்தது.
அதேபோல் ஆதவ் அர்ஜுனா லாட்டரி மார்ட்டினின் மருமகன். கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு அதிக நன்கொடை கொடுத்த தொழிலதிபர்களில் லாட்டரி மார்ட்டினும் ஒருவர். இதனால் ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடக்கம் முதலே பாஜக தொடர்பு அதிகம் என்று நம்பப்பட்டு வருகிறது. புஸ்ஸி ஆனந்தை பொறுத்தவரை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்.
அதன்பின் விஜய்யுடன் வந்தாலும், அவ்வப்போது புஸ்ஸி ஆனந்த் மற்றும் பாஜக உடனான தொடர்புகள் குறித்து அதிகமாக விவாதங்கள் நடந்து வந்துள்ளது. அதேபோல் தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ராஜ் மத்திய அரசு பணியில் இருந்தவர். விஜய் கட்சியில் இணைவதற்காக அவர் தனது மத்திய அரசு பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தனர்.
மத்திய அரசு பணிகளில் இருந்து அவ்வளவு எளிதாக யாராலும் வெளியில் வர முடியாது. மத்திய அரசு ராஜினாமா கடிதத்தை ஏற்கவே சில ஆண்டுகள் ஆகும். காங்கிரஸ் கட்சியின் எம்பியான சசிகாந்த் செந்தில் தனது ராஜினாமா கடிதம் ஏற்கப்படுவதற்காக 5 ஆண்டுகள் வரை காத்திருந்தார். ஆனால் அருண் ராஜ்க்கு மட்டும் எப்படி உடனடியாக ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது என்பது விவாதத்தில் இருக்கும் ஒன்றுதான்.
அதனால் விஜய்யை சுற்றி இருக்கும் 4 நிர்வாகிகளும் ஏதோ ஒரு வகையில் பாஜக உடன் தொடர்பில் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் பாஜகவை நோக்கி விஜய் நகரலாம் என்றும், அதற்கேற்ப கரூர் சம்பவம் அரங்கேறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இத்தனை நாட்கள் விஜய்யை சாடி வந்த பாஜகவும், தற்போது விஜய்க்கு ஆதரவாக பேசத் தொடங்கி இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications