சிபிஐ முன் ஆஜராகும் விஜய்.. சம்மன் கொடுப்பதால் குற்றவாளி கிடையாது.. அண்ணாமலை பேச்சு
சென்னை: விஜய் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜர் ஆகும் நிலையில் இது குறித்து அண்ணாமலை பதில் தெரிவித்துள்ளார். 'சிபிஐ விசாரணைக்கு கூப்பிட்டுள்ளது. விஜய் விசாரணைக்கு சென்றுள்ளார். எல்லாருமே அவர் கருத்தை சொல்ல போகிறார்கள். சம்மன் கொடுப்பதாலே ஒருவர் குற்றவாளி கிடையாது' என்று கூறியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகளோடு விசாரணை நடத்திய சிபிஐ தற்போது கட்சியின் தலைவர் விஜய்யிடம் விசாரிக்க சம்மன் அனுப்பியது. சிபிஐ சம்மனை தொடர்ந்து இன்று விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகிறார்.

அண்ணாமலை பதில்
ஏற்கனவே ஜனநாயகன் படம் வெளியாவதில் மத்திய அரசின் கீழ் உள்ள தணிக்கை குழு சென்சார் சான்றிதழ் வழங்காததால் திரைப்படம் கடந்த 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகாமல் போனது. இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் பாஜக கூட்டணிக்குள் விஜய்யை இழுப்பதற்காகவே அவருக்கு நெருக்கடி கொடுப்படுவதாக அரசியல் நோக்கர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது தொடர்பாக தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-
சம்மன் கொடுப்பதால் குற்றவாளி கிடையாது
சிபிஐ விசாரணைக்கு கூப்பிட்டுள்ளது. விஜய் விசாரணைக்கு சென்றுள்ளார். எல்லாருமே அவர் கருத்தை சொல்ல போகிறார்கள். சம்மன் கொடுப்பதாலே ஒருவர் குற்றவாளி கிடையாது. நமக்கும் சம்மன் கொடுக்கிறார்கள். வழக்குகளில் ஆஜராகிவிட்டு வருகிறோம். முறைப்படி சம்மனுக்கு ஆஜர் ஆகிறார்.
இதில் நான் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. நல்லபடியாக விஜய் போய்விட்டு வரட்டும். ஜனநாயகன் படத்தை பார்க்க நானும் ஆவலுடன் காத்து இருந்தேன். நல்ல திரைப்படம் நல்ல நடிகர்கள் நடிக்கும் போது, நமக்கும் ஆவல் இருக்கும். திரைப்படம் என்பது நடிகர் மட்டும் உருவாக்கும் விஷயம் கிடையது.
ஜனநாயகன் சென்சார் விவகாரம்
லட்சக்கணக்கானவர்கள் பின்னாடி இருக்கிறார்கள். எல்லாரும் சேர்ந்துதான் பண்ணுறாங்க.. ஜனநாயகத்தை பொறுத்தவரை சென்சார் ஏதோ சொல்கிறார்கள். மறு தணிக்கை என எங்கெங்கோ போய்க்கொண்டு இருக்கிறது. அதனால், நானும் உங்களை போல சாதாரண மனிதனாகத்தான் சிபிஎப்சி, ஜனநாயகன் படக்குழுவை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
ஆனால் இந்தியாவில் எப்போதுமே நீதிமன்றம் இருக்கிறது. மேல் முறையீட்டுக்கு வழி இருக்கிறது. எல்லா திரைப்படமும் கடந்து வரும் பாதைதான் இது. என்று அவர் பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications