சென்னையில் நடந்த தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்.. மிஸ்ஸான புஸ்ஸி ஆனந்த்.. அடுத்தது என்ன?
சென்னை: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இல்லாமல் சென்னையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வரும் சூழலில், அவர் இல்லாமல் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி இருக்கின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தவெகவின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் ஆகிய இருவரும் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய வேண்டும் என்று போலீசார் தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு ஏற்காட்டில் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தனிப்படை அமைத்து புஸ்ஸி ஆனந்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இல்லாமல் சென்னையில் தவெகவின் சென்னை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று இருக்கிறது. வழக்கமாக பொதுச்செயலாளர் தலைமையில் தான் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கும். ஆனால் இம்முறை புஸ்ஸி ஆனந்த் தலைமுறைவாகி இருப்பதால், சென்னை மாவட்டச் செயலாளர்கள் தாமாகவே ஆலோசனையை நடத்தி முடித்துள்ளனர்.
ஏற்கனவே தவெக தரப்பில் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டங்கள் 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் தவெகவின் அடுத்தக் கட்ட திட்டங்கள் மற்றும் விஜய்யின் பிரச்சார கூட்டத்தை வடிவமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கரூர் விவகாரம் காரணமாக தமிழ்நாடு சோகத்தில் இருக்கும் சூழலில், தவெகவின் முன்னணி நிர்வாகிகள் தலைமறைவாகி இருக்கின்றனர். ஆனாலும் மாவட்டச் செயலாளர்கள் உடனடியாக ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருப்பது அக்கட்சியின் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications