கரூர் கூட்ட நெரிசல்.. தவெக நிர்வாகிகளுக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்பா.. சட்டம் சொல்வது என்ன?
கரூர்: தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் , தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள பி.என்.எஸ் சட்டப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக என்ன தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது, சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் பிரசார பயணம் மேற்கொண்டார். விஜய் சுற்றுப்பயணத்தின் போது அவரைக் காணவும், அவரது பேச்சை கேட்கவும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். அந்த வகையில், கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை விஜயின் பிரசாரம் நடைபெற்றது.

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி
10 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று தவெக தரப்பில் போலீசாரிடம் அனுமதி பெற்ற நிலையில், கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டது. விஜய் வந்த பிறகு நிலைமை இன்னும் மோசமானது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். நாட்டையே இந்த கூட்ட நெரிசல் சம்பவம் உலுக்கியுள்ளது.
என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
இந்தக் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், புஸ்சி ஆனந்த், மாநில நிர்வாகி சி.டி.ஆர் நிர்மல்குமார் மற்றும் சிலர் என குறிப்பிட்டு, அவர்கள் மீது கரூர் டவுன் காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எஃப்.ஐ.ஆரில் மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள பி.என்.எஸ் சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, பி.என்.எஸ் 105 (கொலைக்கு சமமான கொலைக்கான தண்டனைக்குரிய செயல்), பி.என்.எஸ் 110 (குற்றமற்ற கொலை முயற்சி செயல்), BNS 223 (மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர மற்றும் அலட்சிய செயல்), BNS 223 (அரசு அதிகாரியின் உத்தரவிற்கு கீழ்ப்படியாமை), டி.என்.பி.பி.டி.எல். பிரிவு 3 (பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேண்டும் என்றே காலதாமதம்
இந்த எஃப்.ஐ.ஆர் விவரங்கள் நேற்று வெளியாகின. இதில் விஜய் தனது அரசியல் பலத்தை காட்டுவதற்காக திட்டமிட்டே காலதாமதாக வந்ததாகவும், மாலை 4.45 மணியளவில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையம், தவுட்டுப்பாளையம் வழியாக நுழைந்து, வேண்டும் என்றே காலதாமதம் செய்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் தெருவில் அனுமதி இல்லாமல் ரோடுஷோவை பல்வேறு இடங்களில் நடத்தி, போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி, அதிக இடங்களில் நிபந்தனைகளை மீறியும், வரவேற்புகள் நடத்தியும் காலதாமதம் செய்து இருக்கிறார். கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் கொடுத்த விண்ணப்பத்தில் 10 ஆயிரம் தொண்டர்கள் தான் வருவார்கள் என்று எழுதி கொடுத்துள்ளார்.
ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு
ஆனால் பிரசார கூட்டத்திற்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்தனர் என்பது உள்ளிட்ட பரபரப்பு தகவல் இடம்பெற்று இருந்தது. காவல்துறையினர் இந்த முதல் தகவல் அறிக்கையின் நகலை கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விரைவு தபால் ஆக தாக்கல் செய்துள்ளனர்.
இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆரில் உள்ள நபர்களுக்கு அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்படும் பட்சத்தில், முதல் இரண்டு சட்டப்பிரிவுகளுக்கு 7 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர்கள் கூறும் கருத்தாக உள்ளது.
விஜய்யும் கைது செய்யப்பட வாய்ப்பு
அதேபோல், பொதுச் சொத்துகள் சேதத்திற்கு சிறைத்தண்டனை மட்டுமின்றி அவர்களிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்கும் பி.என்.எஸ். சட்டத்தில் இடம் இருப்பதாகவும் மூத்த வழக்கறிஞர் கூறியுள்ளனர். அதேபோல், இந்த முதல் தகவல் அறிக்கையில், 'அதர்ஸ்' என்ற வார்த்தை உள்ளது.
எனவே, போலீசார் தங்களது விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது, கட்சியின் தலைவர் விஜய் பெயரையும் சேர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், அப்படி சேர்க்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கும் மேற்குறிப்பிட்ட தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அந்த மூத்த வழக்கறிஞர் கூறினார்.












Click it and Unblock the Notifications