கரூர் துயரம்.. நடந்தது என்ன? ஆதாரங்களை வெளியிட்ட தமிழக அரசு.. வீடியோவில் இருப்பது என்ன?
சென்னை: கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தமிழக அரசு மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வீடியோ ஆதாரங்களுடன் அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ் விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் இருப்பது என்ன?
கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை மற்றும் திமுக அரசு மீது தமிழக வெற்றிக் கழகம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை தமிழக அரசு இன்று ஆதாரங்களுடன் மறுத்துள்ளது.

தமிழக அரசு ஆதாரங்களுடன் விளக்கம்
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ், இது தொடர்பாக விளக்கத்தை அளித்தார். செய்தியாளர்களைச் சந்தித்த அமுதா ஐஏஎஸ், த.வெ.க தரப்பில் முன்வைக்கப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டையும் பட்டியலிட்டு, அவை உண்மையில்லை என்பதை விளக்கினார். இதற்கான ஆதாரமாக, சம்பவத்தன்று பல்வேறு செய்தி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நேரலையாக வெளியான காணொளி காட்சிகளை அவர் திரையிட்டுக் காட்டினார்.
வீடியோவில் இருப்பது என்ன?
தமிழக அரசு வெளியிட்டுள்ள வீடியோவில் காலையில் தவெக தலைவர் விஜய் கிளம்புவது முதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நாமக்கல்லில் விஜய் பிரச்சாரத்தின்போது, கடைகளின் போர்டுகளில் தவெக தொண்டர்கள் ஏறிய காட்சிகள் காட்டப்படுகின்றன. தவெக தொண்டர்கள் கடை போர்டுகளை சேதப்படுத்திய காட்சி வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோதும் நெரிசல் ஏற்பட்டதில் பலர் மயக்கமடைந்த காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது, கடுமையான நெரிசல் ஏற்பட்ட நிலையில், சாலையோரம் இருந்த கூரைகளுக்குள் பலர் புகுந்து நெருக்கி அடித்த நிலையில், உள்ளே இருந்து கூரையைப் பிய்த்துக்கொண்டு பலர் மேலே வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கடுமையான தள்ளுமுள்ளு
கடுமையான நெரிசலில், விஜய்யின் பிரச்சார வாகனத்தை நோக்கி, தவெக தொண்டர்களிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதும் அந்த வீடியோவில் காட்டப்படுகிறது. விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே, பலர் மயங்கிய காட்சிகளும், போலீஸ்காரர் ஒருவர் மயக்கமடைந்த தொண்டருக்கு விசிறி விடும் காட்சியும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
மயங்கிச் சரியும் காட்சிகள்
வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஆம்புலன்ஸ் வரும் காட்சிகளும், பலர் மயங்கிய நிலையில் தூக்கிச் செல்லப்படும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. பலர் மயங்கியதாக விஜய்க்கு சொல்லப்பட்டதும், விஜய்யே தண்ணீர் பாட்டில்களை வாங்கி தூக்கிப் போட்டார். விஜய்யே, ஆம்புலன்ஸுக்கு வழி விடுமாறும் மைக்கிலேயே கூறினார். அதைத்தொடர்ந்து, கூட்ட நெரிசலில் பலர் ஆங்காங்கே மயங்கி விழுந்த காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
போலீசுக்கு நன்றி சொன்ன விஜய்
பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், தன் பேச்சைத் தொடங்கும் முன்பு காவல்துறைக்கு நன்றி தெரிவிக்கும் காட்சியையும் தமிழக அரசு வீடியோவில் சுட்டிக்காட்டி உள்ளது. "கூட்டத்தை நிர்வகிப்பதில் உள்ளூர் போலீசார் காட்டிய ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்தபின், இப்போது அரசாங்கத்தின் மீது பழிகூறுவது நியாயமில்லை" என்று தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ். கூறியுள்ளார்.
விஜய் பேசும்போது முதலில் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த அவசர ஊர்திதான் சென்றது. அதன்பிறகுதான் மக்கள் கீழே விழுவதைப் பார்த்த காவல்துறையினர் முதலில் செல்போன் மூலமாக லோக்கல் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், சிக்னல் கிடைக்காததால், பிறகு வொயர்லெஸ் மூலம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு பின்னர் அவசர ஊர்திகளை வரவழைத்துள்ளனர். இரவு 7.17 முதல் 9.45 வரை மீட்புப் பணிகள் நடந்தன என அமுத ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications