காஷ்மீரில் நடந்தது நாளை தமிழ்நாட்டிலும் நடக்கும்.. கருணாநிதி சிலை திறப்புவிழாவில் மமதா எச்சரிக்கை!
சென்னை: ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்தது நாளை தமிழகத்திலும் வங்கத்திலும் கூட நடக்கலாம் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி நினைவு தினத்தை அடுத்து கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் திமுகவின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது.
இதையடுத்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஓராண்டு நினைவு தின கூட்டம் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மிகவும் உருக்கமாக பேசினார்.
என்ன சொன்னார்
கருணாநிதி குறித்து தொடக்கத்தில் தமிழில் பேசினார் மமதா பானர்ஜி அதன்பின் ஆங்கிலத்தில் பேசினார். அதில், தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் வணக்கம். ஒருவருடத்திற்கு முன் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தேன். கருணாநிதி தமிழ் தாயின் தலைமகன். தமிழக அரசியலின் தலை சிறந்த தலைவர் அவர்.எனக்கு சரியாக தமிழ் பேச தெரியாது, விரைவில் நன்றாக பேசுவேன். வணக்கம் என்று சொல்ல எனக்கு மிகவும் பிடிக்கும்.
எப்படி
கருணாநிதியை யாராலும் மறக்க முடியாது. கருணாநிதியின் செயல்கள் எப்போதும் நாடு முழுக்க பேசப்படும். ஸ்டாலின் என்ற பெயரே புரட்சிக்கான பெயர்.பெயருக்கு ஏற்றபடி ஸ்டாலின் அநீதிக்கு எதிராக போராடுகிறார். கருணாநிதி இன்றும் நம்முடன் கொள்கையாக இருக்கிறார். மக்களுக்காக நாம் போராட வேண்டும் என்று கருணாநிதி உணர்த்தினார்.
என்ன மொழி
தாய் மொழிக்காக போராட கற்றுக்கொடுத்தவர் கருணாநிதி. கருணாநிதி ஒரு சரித்திரம். சிறுபான்மை மக்களுக்காக கருணாநிதி போராடினார். எந்த விதமான பாசிச திட்டங்களுக்கும் எதிராக நாங்கள் போராடுவோம். நாங்கள் தமிழகத்தையும், வங்கத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டோம். நாங்கள் இந்த போராட்டத்தில் தோல்வி அடைய மாட்டோம்.
காஷ்மீர்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய காஷ்மீர் அரசியல் தலைவர்களை வீட்டு சிறையில் வைத்து இருக்கிறது பாஜக. அவர்கள் இங்கே வர வேண்டியவர்கள். அவர்களை பாஜக அடைத்து வைத்து இருக்கிறது. அவர்கள் தமிழகத்திலும் இப்படி செய்ய நினைப்பார்கள்.
என்ன விருப்பம்
தமிழக மக்களின் விருப்பம் இல்லாமல் அவர்கள் இப்படி செய்ய நினைப்பார்கள். ஆனால் நாம் அனைத்தையும் எதிர்க்க வேண்டும். நம்முடைய இரண்டு மாநிலத்திலும் ஒன்றாக தேர்தல் நடக்க போகிறது. நாம் ஒன்றாக வெல்ல வேண்டும். நம்முடைய வெற்றியை மக்களுக்கு நாம் பரிசளிக்க வேண்டும், ஜெய் பெங்கால்.. ஜெய் தமிழ்நாடு.. ஜெய் திராவிடம் என்று மமதா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.