10.5% இடஒதுக்கீடு ரத்தாகும் என அதிமுகவுக்கும் தெரியும்.. பாமகவுக்கும் தெரியும்.. கஸ்தூரி பரபர ட்வீட்
சென்னை: வன்னியர் உள ஒதுக்கீட்டு என்பது தேர்தலைக் கருத்தில் கொண்டு அமல்படுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, இந்தச் சட்டம் நிற்காது என அதிமுகவுக்குத் தெளிவாகத் தெரியும். பாமகவுக்கும் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது 69% இட ஒதுக்கீடு முறை நடைமுறையில் உள்ளது. அதில் எம்பிசி என்று அழைக்கப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
அதில் வன்னியர் சமூகத்திற்கு மட்டும் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாகக் கோரிக்கை வைக்கப்பட்டது.

10.5 சதவீத உள் ஒதுக்கீடு
இந்த கோரிக்கையை ஏற்று, அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது இது தொடர்பான சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எம்பிசி பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழகச் சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில், இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்தத் தடை விதிக்க கோரியும் இந்த 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் 25க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக இந்த வழக்குகள் முதலில் விசாரிக்கப்பட்டு வந்தன. ஆனால் பின்னர் இது மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு வழக்கு மாற்றப்பட்டது.

அரசியல் லாபம்
அப்போது மனுதாரர்கள் தரப்பில், "சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி இந்த சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி 68 சாதிகளைக் கொண்ட சீர் மரபினர் பிரிவினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் இதர எம்பிசி பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது" என வாதிடப்பட்டது. மேலும், தேர்தலைக் கருத்தில் கொண்டு அரசியல் லாபத்திற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டு உள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையிலேயே வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களின் மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு.தரப்பில் வாதிடப்பட்டது.

ஐகோர்ட் தீர்ப்பு
இந்த வழக்கில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்வதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. முறையாகச் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் முறையான கணக்கெடுப்பு நடத்தப்படாமல் எப்படி இட ஒதுக்கீடு வழங்க முடியும் எனக் கேள்வி எழுப்பியதுடன், இந்த வழக்கில் அரசுத் தரப்பின் விளக்கம் போதுமானதாக இல்லை எனக் கூறி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தது.

பாமக
உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்குக் குறித்து பலரும் பல்வேறு விதமாகக் கருத்து தெரிவித்து வருகின்றன. வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் ரத்து பேரதிர்ச்சி என்று தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ், இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இது குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

கஸ்தூரி ட்வீட்
அதில் அவர், "வன்னியர் உள ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது யாருக்காவது ஆச்சரியமாக இருக்கிறதா? இது பா.ம.க.வின் வாக்காளர்களுக்குக் கவர அளிக்கப்பட்ட 'தேர்தல் வாக்குறுதி' என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தச் சட்டம் நிற்காது என அதிமுகவுக்குத் தெளிவாகத் தெரியும். பாமகவுக்கும் தெரியும்" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications