குடிசை வீடு, சைக்கிள் மட்டுமே சொத்து.. ஆட்டோவில் பிரசாரம்.. ஒடிஸாவில் ஏழ்மை நிலையில் வாழும் "மோடி"
சென்னை: ஒடிஸாவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பாலசோர் எம்பி குடிசையில் வீட்டில் வாழ்வதாகவும் சைக்கிளை மட்டுமே சொந்தமாக வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து புகைப்படங்களுடன் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
7 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது ஒடிஸாவின் பாலசோர் எம்பி தொகுதி. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் எம்பியாக இருந்துள்ளனர். இதைத் தொடர்ந்து 1998-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை பாஜக பிரமுகர் எம்பியாக இருந்து வந்தார்.
இதையடுத்து 2009-இல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும் 2014-ஆம் ஆண்டு ஒடிஸாவின் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியின் வேட்பாளரும் எம்பியாக இருந்துள்ளனர். இந்த முறை இந்த தொகுதியில் பிரதாப் சந்திர சாரங்கி என்ற ஒருவருக்கு பாஜக வாய்ப்பு கொடுத்துள்ளது.

புகைப்படங்கள்
இவரை எதிர்த்தவர் ரவீந்திர குமார் ஜெனா ஆவார். இவர் கோடீஸ்வரர் ஆவார். இவருக்கும் பிரதாப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் பாஜகவின் சாரங்கியே வென்றார். அவர் யார் என்பது குறித்து நடிகை கஸ்தூரி சங்கர் புகைப்படங்களுடன் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஒடிஸாவின் மோடி
அதில் தனது டுவிட்டரில் கூறுகையில் பாலசோருக்கு பாஜக சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள எம்பி பிரதாப் சந்திர சாரங்கி புதியவர். இவருக்கு 64 வயதாகிறது. இவரை அப்பகுதி மக்கள் ஒடிஸாவின் மோடி என்றே அழைக்கிறார்கள்.

வெறும் சைக்கிள்
இவர் வாழ்வது மாட மாளிகையோ இல்லை தட்டை வீடோ அல்ல. குடிசை வீட்டில் வாழ்கிறார். மற்ற எம்பிக்களுக்கு இருப்பது போல் இன்னோவா காரோ, பிஎம்டபிள்யூ காரோ இவருக்கு இல்லை. வெறும் சைக்கிளை மட்டுமே வைத்துள்ளார்.
|
கோடீஸ்வரர்
இவர் தனது பிரச்சாரத்தை ஆட்டோவில் மேற்கொண்டார். பழங்குடியின பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளை தொடங்கியுள்ளார். இவர் மது மற்றும் ஊழலுக்கு எதிராக பாடுபடுபவர். இவரை எதிர்த்து நின்ற கோடீஸ்வரரையே தோற்கடித்த பெருமை இவருக்கு உண்டு என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications