சாத்தான்குளம் நிகழ்வு... 159 ஆண்டுகள் காவல்துறை வரலாற்றில் அவமான சின்னம் -கேரள முன்னாள் டி.ஜி.பி.
சென்னை: சாத்தான்குளம் காவல்நிலையம் வருவாய்துறை கட்டுப்பாட்டின் கீழ் சென்றிருப்பது, 159 ஆண்டுகால இந்திய காவல்துறை வரலாற்றில் அவமான நிகழ்வு என கேரள முன்னாள் டிஜிபி ஆஸ்தானா தெரிவித்துள்ளார்.
மூத்த காவல்துறை அதிகாரிகள் மீது நம்பிக்கையின்றி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது என அவர் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார்.
ஒரு சிலர் செய்த தவறுகளால் ஒரு காவல்நிலையமே வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்கு சென்றிருப்பதை அவமானகரமான நிகழ்வாகவே பார்க்கின்றனர் தேசியளவிலான காவல்துறை உயர்அதிகாரிகள்.
சாத்தான்குளம் தந்தை,மகன் மரணம்... நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மலையாளிகள்
தேசிய அளவில்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 19-ம் தேதி இரவு கைது செய்யப்பட்ட தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ், கோவில்பட்டி கிளைச் சிறையில் மரணம் அடைந்த விவகாரம் தேசியளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் ஊரகப்பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வு இன்று தலைநகர் டெல்லி வரை பேசு பொருளாக உருவெடுத்துள்ளது. காரணம் சாத்தான்குளம் காவல்நிலையம் வருவாய் துறை கட்டுப்பாட்டின் கீழ் சென்றிருப்பது தான்.
159 ஆண்டு கால வரலாற்றில்
இந்நிலையில் இது குறித்து ட்வீட்டரில் பதிவு வெளியிட்டுள்ள கேரள முன்னாள் டிஜிபி ஆஸ்தானா, சாத்தான்குளம் நிகழ்வு 159 ஆண்டுகால இந்திய காவல்துறை வரலாற்றில் அவமான சின்னம் என வேதனை தெரிவித்துள்ளார். மேலும், 1861-ம் ஆண்டு இந்திய காவல்துறை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இது போன்ற ஒரு நிகழ்வு நாட்டில் இதுவரை நடந்ததில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மூத்த அதிகாரிகள் மீது நம்பிக்கையின்றி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை வெட்கப்பட வேண்டிய ஒன்று என அவர் கூறியுள்ளார்.
காவல்துறை அதிகாரிகள்
கேரள முன்னாள் டிஜிபி ஆஸ்தானா வெளியிட்டுள்ள இந்த வேதனையான பதிவு, காவல்துறை உயர் அதிகாரிகள் மட்டத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளும், சட்ட நிபுணர்களும் சாத்தான்குளம் வழக்கின் போக்கை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதனிடையே சாத்தான்குளம் நிகழ்வு தொடர்பாக முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ அண்மையில் தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக வெளிவரும் தகவல்கள் தமிழகத்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளன. தற்போது இந்த வழக்கு விசாரணை வேகம் எடுத்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.