எவன் இருந்தா என்ன, போனா என்ன.. விசிக, ஐயூஎம்எல் குறித்து ஆர்.எஸ் பாரதி ஒருமையில் விமர்சனம்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சி உதவிகளுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. விஜயுடன் 9 பேர் அமைச்சராக பதவியேற்றனர். நேற்று மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இன்று விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சியும் அமைச்சரவையில் இடம்பெறவுள்ளது. காங்கிரஸை தொடர்ந்து விசிக, ஐயூஎம்எல் மீதும் திமுக விமர்சனம் வைக்க தொடங்கியுள்ளது.
ஏற்கனவே விசிக, ஐயூஎம்எல் மீது ஆ. ராசா கடுமையான சொற்களால் விமர்சனம் செய்திருந்தார். திமுகவின் மற்றொரு மூத்த நிர்வாகியான ஆர்.எஸ். பாரதி விசிக, ஐயூஎம்எல் அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக ஒருமையில் விமர்சித்துள்ளார்.

பின்னடைவு ஏற்படும் அபாயம்
இதுகுறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தனியார் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "விஜய் பதவியேற்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதை நாங்கள் சுட்டி காட்டியபோது திருத்திக் கொள்கிறோம் என்று அமைச்சர் ஒருகூர் கூறினார். ஆனால் மீண்டும் மீண்டும் அதே செயல்கள் தொடர்கின்றன.
கல்வி, மருத்துவம், பொருளதாரத்தில் எங்கள் ஆட்சியில் தமிழகம் நம்பர் 1 இடத்தில் இருந்தது. அடுத்த 5 வருடங்கள் தமிழகம் இன்னும் கீழே போகும் என்கிற அச்சம் உள்ளது. எங்கள் தலைவர் மிகவும் கஷ்டப்பட்டு பொருளதாரத்தில் டபுள் டிஜிட்டில் வந்துவிட்டார். எப்படி தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதோ, பொருளாதாரமும் பின்னடைவை சந்திக்கும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.
விசிக ஐயூஎம்எல் மீது ஒருமையில் விமர்சனம்
பி.எம் ஶ்ரீ திட்டத்தை எதிர்ப்பது சாத்தியப்படாது என்பது போல் தான் இந்த ஆட்சியின் செயல்பாடு இருக்கிறது. தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறுவது பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் இல்லாத அமைச்சரவையில் எவன் இருந்தால் என்ன எவன் போனால் என்ன. அதைப்பற்றி கவலையும் இல்லை, அக்கறையும் இல்லை" என்று கூறியுள்ளார். விசிக, ஐயூஎம்எல் குறித்து அவர் ஒருமையில் விமர்சித்திருப்பது சர்ச்சையாகியுள்ளது.












Click it and Unblock the Notifications