முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக டெல்லி செல்லும் விஜய்.. கடைசியா போனது ஞாபகம் இருக்கா?
சென்னை: தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், ஜோசப் விஜய் முதன்முறையாக நாளை (மே 23) டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் டெல்லி செல்லவுள்ள விஜய், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி, வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கூட்டணி ஆட்சிக் கட்டிலில் தவெக
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, இந்திய அரசியல் களத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.
ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெகவுக்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன.
இதையடுத்து, கடந்த மே 10 ஆம் தேதி தமிழ்நாட்டின் 13-வது முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் முதற்கட்டமாக 9 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேரில் பங்கேற்றார்.
அமைச்சரவை விரிவாக்கம்
இதன் தொடர்ச்சியாக, மே 21 அன்று தமிழ்நாடு அமைச்சரவை முறைப்படி விரிவாக்கம் செய்யப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற விழாவில், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 2 பேர் மற்றும் தவெக எம்.எல்.ஏ-க்கள் 21 பேர் என மொத்தம் 23 பேர் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கான துறைகளும் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இன்று விசிக மற்றும், ஐ.யு.எம்.எல் சார்பில் தலா ஒருவர் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்.
டெல்லி பயணத்தின் முக்கிய நோக்கங்கள்
இந்நிலையில் முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் விஜய் முதன்முறையாக மேற்கொள்ளும் டெல்லி பயணத்தின் போது, நாட்டின் மிக முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்புகள் அரசியல் ரீதியாகவும், தமிழக வளர்ச்சி ரீதியாகவும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தலைவர்களுடன் சந்திப்பு:
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மரியாதை நிமித்தமாகச் சந்திக்கிறார். அரசு முறைப் பயணமாக வெளிநாடு சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று நாடு திரும்புகிறார். தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் முதலமைச்சர் சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்புகளின் போது, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதிப் பங்கீடு மற்றும் மாநிலத்தின் முக்கிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு நிதி கோரும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை விஜய் வழங்கவுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு:
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவளித்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரையும் முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறவுள்ளார்.
டெல்லியில் தயாராகும் தமிழ்நாடு இல்லம்
முதலமைச்சர் விஜய்யின் வருகையை முன்னிட்டு, டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் முதலமைச்சர் தங்கும் அறை, ஆலோசனை அரங்கம் உள்ளிட்ட பகுதிகளைப் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழர் பாரம்பரிய வரவேற்பு
முதலமைச்சராகப் பொறுப்பேற்று முதன்முறையாக டெல்லி வரும் விஜய்க்கு, தமிழர் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்க அரசு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காகத் தமிழ்நாட்டில் இருந்து அரசு அதிகாரிகள் ஏற்கனவே டெல்லிக்கு விரைந்துள்ளனர்.
இருப்பினும், முதலமைச்சர் விஜய்யின் இந்த டெல்லி பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக அரசு தரப்பில் இருந்து இன்னும் ஓரிரு மணி நேரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் மோடியை விஜய் சந்திக்க உள்ள நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கடைசியாக
முதலமைச்சர் விஜய் கடைசியாக கடந்த 2026 மார்ச் 14-15 ஆகிய தேதிகளில் டெல்லிக்குச் சென்றிருந்தார். கரூர் கூட்டத்தில் நடந்த நெரிசல் விபத்து தொடர்பான சி.பி.ஐ விசாரணைக்காக, தவெக தலைவராக அவர் டெல்லி தலைமையகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கச் சென்றிருந்தார். அப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்தே, காரில் வெளியே வரும்போதே ரசிகர்களைச் சந்தித்திருந்தார் விஜய்.
அரசியல் கட்சித் தலைவராக விசாரணைக்காக டெல்லி சென்ற அவர், தற்போது முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை (மே 23) டெல்லிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications