விஜய் இதை கண்டிப்பா செஞ்சாகனும்.. இல்லைன்னா ரொம்ப கஷ்டம்! குமுறும் நிர்வாகிகள்!
சென்னை: கரூர் நெரிசல் சம்பவத்தில் நீதிமன்றத்தில் விஜய் மற்றும் அவருடய தமிழக வெற்றிக் கழகம் கட்சி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது. இனியும் இதுபோன்ற நெருக்கடிகளில் சிக்காமல் இருக்க, கட்சி கட்டமைப்புகளில் சில மாற்றங்களை விஜய் கட்டாயமாக செய்தாக வேண்டும்.
என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்? என்பது குறித்து கட்சி நிர்வாகிகளே சில அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார்கள். அதை பின்பற்றினாலே எதிர்காலத்தில் நெருக்கடிகளை தவிர்க்க முடியும்.

கரூரை விடுங்க.. நாமக்கல் சொல்லும் பாடம்
கரூரில் 27ம் தேதி விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது நெரிசல் ஏற்பட்டு அதில் 41 பேர் உயிரிழந்தனர். நெரிசலுக்கு காரணம் சதி என்று விஜய் தரப்பு குற்றம்சாட்டுகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு ஏறத்தாழ 68 மணி நேரத்திற்கு பிறகு வீடியோ வெளியிட்டிருந்த விஜய், கரூரில் மட்டும்தான் இப்படி நடந்தது, இதற்கு முன்னர் பிரச்சாரம் மேற்கொண்ட எந்த மாவட்டங்களிலும் இப்படியெல்லாம் நடக்கவேயில்லை என்று, சூடம் ஏற்றி சத்தியம் செய்யாத குறையாக உறுதியாக தெரிவித்திருந்தார்.
ஆனால் கரூர் சம்பவத்திற்கு முன்னர் நாமக்கல்லில் மிகப்பெரிய பேரிடர் உருவாவதற்கான சூழல் ஏற்பட்டிருந்தது என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். நாமக்கல்லில் கே.எஸ்.தியேட்டர் வாசல் அருகே 27ம் தேதி காலை 8.45 மணிக்கு விஜய் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் சென்னை வீட்டிலிருந்து விமான நிலையம் கிளம்பியதே 8.45 மணிக்குதான். இறுதியாக மதியம் 2.45 மணிக்கு அவர் நாமக்கல்லில் பேச தொடங்கினார்.
பேசும்போதே நடந்த சம்பவம்
இதற்கு இடைப்பட்ட நேரத்தில் கால் கடுக்க காத்திருந்த தொண்டர்கள், ரசிகர்கள் வெயிலில் சலித்துபோய், உடலில் கொஞ்சமும் தண்ணீர் கூட இல்லாமல் மயக்கமடைய தொடங்கினர். விஜய் பேச தொடங்கும்போதே பலரும் மயங்கிவிட்டனர். விஜய் பேசி முடிப்பதற்குள் மொத்தம் 50 பேர் வரை மயங்கி விழுந்திருக்கின்றனர். தாமதமான வருகை, முன்னறிவிப்பு இல்லாதது, போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாதது போன்றவை இதற்கு காரணமாக உள்ளது.
உள்ளூர் நிர்வாகிகள்
வழக்கமாக கட்சி தலைவர்கள் ஒரு ஊரில் ரோடு ஷோ நடத்துகிறார்கள் அல்லது பொதுக்கூட்டத்தை நடத்துகிறார்கள் எனில், முந்தைய நாள் வந்து உள்ளூர் நிர்வாகிகளை சந்தித்து பேசுவார்கள். என்ன ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது? எத்தனை பேர் வருவார்கள்? என்ன பேச வேண்டும்? உள்ளூர் பிரச்சனைகளில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? உள்ளிட்டவை குறித்த ஆலோசனை செய்வார்கள். ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தில் இந்த செட்டப் கிடையாது.
தன்னை தாண்டி யாரும் விஜய்யிடம் நெருங்கிவிட கூடாது என்பதில் புஸ்ஸி ஆனந்த் மிக கறாராக இருக்கிறார். கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அனைவரையும் புஸ்ஸி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இது குறித்து ஏற்கெனவே விஜய்யின் தனிப்பட்ட வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி விமர்சித்திருந்தார். இருப்பினும் விஜய் இதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.
நிர்வாகிகளின் மனநிலை
இரண்டாம் கட்ட தலைவர்களை பொறுத்தவரை விஜய்யின் பார்வை நம் மீது பட வேண்டும் என்பதற்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். விஜய்யை நேரடியாகவும் பார்க்க முடியவில்லை, பேசவும் முடியவில்லை. எனவே பிரச்சார கூட்டத்திற்கு வரும் விஜய்யை விமான நிலையத்திலிருந்தே மொய்க்க தொடங்கிவிடுகிறார்கள். விஜய்யின் வாகனம் எங்காவது நிற்குமா? அவருக்கு ஏதேனும் சகாயம் செய்து, அவரிடமிருந்து நற்பெயரை வாங்கிவிட மாட்டோமா? விஜய் நம்மை பாராட்டிவிட மாட்டாரா? நம்மை அடையாளம் கண்டுக்கொள்ள மாட்டாரா? தொகுதியில் போட்டியிட சீட் கிடைத்துவிடாதா? கட்சிக்குள் முக்கிய போஸ்ட்டிங் கிடைக்காதா? என்றெல்லாம் முயற்சிக்கிறார்கள்.
எனவேதான் களத்தில் மக்களுக்கும், தொண்டர்களுக்கும் குடிநீர், மருத்துவ வசதி, இன்ன பிற ஏற்பாடுகளை செய்வதை காட்டிலும், விஜய்யை கவர்வதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள். தவெக தோல்வியை சந்தித்த முக்கியமான இடம் இது.
விஜய் களமிறங்க வேண்டும்
இதை புரிந்துக்கொண்டு, எதிர்காலத்தில் இரண்டாம் கட்ட நிர்வாகிகளுடன் விஜய் நேரடியாக கலந்தாலோசிக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை, வலியுறுத்தல்களை காது கொடுத்து கேட்க வேண்டும். வெறுமென புஸ்ஸி ஆனந்த் மட்டும் நிர்வாகிகளை வழிநடத்தினால் போதாது. விஜய் களமிறங்க வேண்டும். முதலில் அதற்காக தன்னை விஜய் தயார் செய்துக்கொள்ள வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர். இப்படி செய்வதன் மூலம் எதிர்காலத்தில், நிர்வாகிகளை ஒழுக்கத்துடன் வழிநடத்த முடியும். அந்த நிர்வாகிகள் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவார்கள்.












Click it and Unblock the Notifications