"திமுக கூட்டணியை முறித்துக் கொள்ள தயாரா? முதல்வரை கண்டிக்க முடியுமா?”- காங்கிரஸை விளாசிய குஷ்பு !
சென்னை: தி.மு.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளத் தயாரா என காங்கிரஸ் கட்சிக்கு குஷ்பு சவால் விடுத்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்த நிலையில், பேரறிவாளன் முதல்வரை ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அந்தப் புகைப்படத்தை பகிர்ந்துள்ள பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, தி.மு.கவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா என சவால் விடுத்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி நேற்று விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் வரவேற்றார்.
பேரறிவாளன் விடுதலைக்கு தமிழக காங்கிரஸ் கட்சி அதிருப்தி தெரிவித்தது. இந்நிலையில் இன்று பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

கட்டியணைத்த ஸ்டாலின்
விடுதலை தீர்ப்புக்குப் பின்னர் முதல்வர் ஸ்டாலினை நேற்று பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் சந்தித்தனர். அப்போது பேரறிவாளனை ஆரத்தழுவி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் விஷயத்தில் முதல்வர் இந்தளவுக்கு மகிழ்ந்தது காங்கிரஸார் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குஷ்பூ
இந்த நிலையில் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியும், தற்போது பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினராக இருப்பவருமான நடிகை குஷ்பூ காங்கிரஸை கடுமையாகச் சாடியுள்ளார். குஷ்பூ தனது ட்விட்டர் பதிவில், பேரறிவாளன் விடுதலையான பிறகு முதலமைச்சர் அவரை கட்டி அணைக்கிறார். ஆனால் பா.ஜ.க அரசியல் செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

கூட்டணியை முறிக்க தயாரா
மேலும், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தி.மு.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா? முதலமைச்சரின் செயலை உங்களால் கண்டிக்க முடியுமா? முதுகெலும்பற்றவர்களின் செயலாகவே காங்கிரசின் நடவடிக்கை இருக்கிறது என குஷ்பூ கடுமையாகச் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications