சென்னையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை.. அதிரடி நடவடிக்கையால் பத்திரமாக மீட்ட போலீசார்!
சென்னை: அரசு நலத்திட்டங்களை பெற்று தருவதாக கூறி, பிறந்து 45 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டது சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் 24 மணி நேரத்திற்குள் குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் ஆரோக்யதாஸ். இவருக்கும், நிஷாந்தி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஆனால் 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்திருக்கின்றனர். இப்படி இருக்கையில் கடந்த 45 நாட்களுக்கு முன்னர் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. நீண்ட காலத்திற்கு பிறகு குழந்தை பிறந்ததால் மொத்த குடும்பமுமே சந்தோஷத்தில் இருந்திருக்கிறது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி இவர்களது வீட்டிற்கு தீபா எனும் பெண் வந்திருக்கிறார்.

ஏழை எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்டங்களை பெற்று தருபவர் என்று தன்னை அறிமுகம் செய்துக்கொண்ட தீபா, ஆண் குழந்தைகளுக்கு என அரசு ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், என்னுடன் வந்தால் நலத்திட்ட உதவிகளை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதற்காக 14ம் தேதி கைகுழந்தையுடன் தாய் நிஷாந்தி, தீபா இருவரும் தி.நகர் செல்வது என திட்டமிடப்பட்டிருக்கிறது. செலவுக்காக ரூ.200 தீபா கொடுத்திருக்கிறார். நேற்று திட்டமிட்டபடி குழந்தையுடன் நிஷாந்தியும், தீபாவும் தி.நகர் வந்திருக்கின்றனர்.
வந்த இடத்தில் சாப்பிடுவதற்காக ஓட்டல் ஒன்றில் நுழைந்திருக்கிறார்கள். முதலில் வேகவேகமாக சாப்பிட்டு முடித்த தீபா, கையை கழுவிவிட்டு வந்து அமர்ந்திருக்கிறார். இரண்டாவதாக சாப்பிட்டு முடித்த தாய் நிஷாந்தி கை கழுவ செல்லும்போது, "குழந்தையை கொடுங்கள் நான் வைத்துக்கொள்கிறேன்" என தீபா கேட்டு வாங்கியுள்ளார். இப்படியாக குழந்தை தீபாவின் கைக்கு மாறியிருக்கிறது. ஆனால், தாய் நிஷாந்தி கை கழுவிட்டு வருவதற்குள் குழந்தையை எடுத்துக்கொண்டு தீபா ஓட்டம் பிடித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தாய் நிஷாந்தி உடனே கண்ணகி நகர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் முதலில் நிஷாந்தியிடம் விசாரணை தொடங்கிய போலீசார் சில கேள்விகளை கேட்டனர். ஆனால் அதற்கு நிஷாந்தி சரியாக பதில் அளிக்கவில்லை. இதில் சந்தேகமடைந்த போலீசார் ஓட்டலின் சிசிடிவி கேமராக்களை சோதனை செய்தனர். இதில் குழந்தையை தீபா தூக்கி செல்வது தெளிவாக தெரிந்தது. இதனையடுத்து தீபாவை பிடித்து குழந்தையை மீட்க ஆய்வாளர் தயாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தீபா ஏறிச்சென்ற ஆட்டோவின் எண்ணை கண்டுபிடித்த போலீசார், உடனடியாக ஆட்டோ ஓட்டுநரை தேட தொடங்கினர். இப்படியாக திருவேற்காடு பகுதியில் தீபா குழந்தையை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தீபாவை கைது செய்த போலீசார், குழந்தையை பத்திரமாக மீட்டனர். சென்னையில் குழந்தை கடத்தப்பட்டு 24 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பது, போலீசார் மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications