கிளாம்பாக்கத்துக்கு யோகம்.. பஸ் ஸ்டாண்டு + ரயில்.. இதுக்கு நடுவுல அதுவேறயா.. குஷியில் பெருங்களத்தூர்
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு கோரிக்கை வலுத்து வருகிறது. இதனால், தென்சென்னையின் அடையாளமே வேற லெவலுக்கு உயர்ந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கிளாம்பாக்கத்தில் வடிகால் வசதி பணிகள் நடந்து கொண்டிருப்பதால், பஸ் ஸ்டாண்டு திறப்பது தள்ளிப்போயுள்ளது.. ஜிஎஸ்டி சாலையில், புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்தும் பணி துரிதமாகி உள்ளது..

இந்த கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதன் மூலம், பஸ்நிலைய பகுதியில் மழை நீர் தேங்காமல் எதிரில் உள்ள ரெயில்வே தடங்களை கடந்து அடையாறு ஆற்றுப்படுகைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வண்டலூர் ஏரி: அதேபோல, இந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியேறும் மழைநீர் சுமார் 180 அடிநீளமுள்ள ஜிஎஸ்டி சாலையை கடந்து கிளாம்பாக்கம் ஏரி, மற்றும் வண்டலூர் ஏரிகளுக்கும் செல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளும் கையில் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இதைத்தவிர, பஸ் ஸ்டாண்டு அருகில், சுமார் 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர்கால்வாயை 2 மடங்கு அகலப்படுத்துவதுடன், புதிதாக 1180 மீட்டர் நீளத்தில் புதிய கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 65 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அனுமதி கோரப்பட்டு உள்ளதாம்..
ரயில்வே ஸ்டேஷன்: மற்றொருபக்கம், கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணி 4 மாதங்களில் தொடங்கப்போவதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.. கிட்டத்தட்ட 3 நடைமேடை கொண்ட கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகளை, ஒரு வருடத்துக்குள் முடிக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.40 லட்சம் நிதியை ரெயில்வே நிர்வாகத்திற்கு, சிஎம்டிஏ வழங்கியிருப்பதாகவும் தகவல்கள் கூறியிருக்கின்றன.
இந்நிலையில், மெட்ரோ ரயில்சேவையையும், விமானநிலையம் - கிளாம்பாக்கம்வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தற்போது எழுந்துள்ளன.. காரணம், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவே, பரங்கிமலை- சென்னை சென்ட்ரல், விமான நிலையம்- விம்கோ நகர் ஆகிய 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கிளாம்பாக்கம்: அதேபோல, 2ம் கட்ட மெட்ரோ ரயில்திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித் தடங்களில் திட்டப் பணிகள் நடைபெறும்சூழலில், சென்னை விமான நிலையம்- கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ. தொலைவில் நீட்டிப்பு செய்யவும் திட்டமிடப்பட்டது.
அதன்படி, இந்த வழித்தடத்தில் பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலக்ஷ்மி நகர், திரு.வி.க நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அண்ணா உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் பேருந்துமுனையம் ஆகிய 12 மெட்ரோ நிலையங்கள் உயர்மட்ட பாதையில் அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டன.
விரிவான திட்ட அறிக்கை: இதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, ஒப்புதலும் கிடைத்த நிலையில், திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை கடந்த வருடம் அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், இபபோதுவரை இதற்கு ஒப்புதல் கிடைக்காமல் உள்ளது.. இதனால், விரைந்து ஒப்புதல் தந்து, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற வேண்டுகோள்கள் எழுந்துவருகின்றன.
ஒப்புதல் மட்டும் கிடைத்துவிட்டால், பல்லாவரம், குரோம்பேட்டை, சிட்லப்பாக்கம், தாம்பரம், முடிச்சூர், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம் பகுதியின் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதுடன் தென் சென்னைக்கே இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications