கிளாம்பாக்கம் ரயில் நிலையம் என்னதான் பிரச்சினை! ஆகாய நடைபாதை மேட்டர் என்னாச்சு.. வெளியான அப்டேட்
சென்னை: பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த 2024 முதல் தொடங்கி நடந்து வருகிறது. முதலில் கடந்த மே மாதத்தில் இந்த ரயில் நிலையம் திறக்கப்படும் என்று கூறப்பட்டது. பின்னர் ஜூன் மாதம் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது ஜூலை மாதம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 80 சதவீத பணிகள் முடிந்துள்ளதாக கூறியுள்ள அதிகாரிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல் ரயில் நிலையம் வரையிலான ஆகாய நடைமேம்பாலம் அமைப்பதில் ஏற்பட்ட தாமதமே இதற்கு காரணம் எனவும் சொல்லப்படுகிறது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. தனியார் ஆம்னி பஸ்களும் கோயம்பேடு சந்தை அருகே உள்ள தனியார் ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் போது நகருக்குள் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பதால் சென்னைக்கு வெளியே வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

கிளாம்பாக்கம் ரயில் நிலையம்
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் பயணிகளின் பயன்பாட்டில் இந்த பேருந்து நிலையம் உள்ள நிலையில், பேருந்து நிலையத்திற்கு வருவதில் பெரும் சிரமம் இருப்பதாக பயணிகள் தொடர்ந்து புகார்களை முன்வைத்தனர். இதையடுத்து, வண்டலூர் - ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையில் புதிய ரயில் நிலையத்தை அமைக்க அரசு முடிவு செய்தது. இதன்படி, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த 2024 முதல் தொடங்கியது.
ரயில் நிலையத்தில் இரண்டு மேடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஒரு நடைமேடை அமைக்கும் பணி முடிந்த நிலையில், 2-வது நடைமேடை கட்டும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இது 'ஐ-லேண்ட்' நடைமேடை என அழைக்கப்படுகிறது. அதாவது, நடைமேடையின் இருபக்கங்களிலும் ரயில் பாதைகளை கொண்டிருக்கும். ரயிலின் இரு பக்கங்களிலும் பயணிகள் நடைமேடையை அணுக முடியும்.
ஆகாய நடைமேடை பணியில் தொய்வு
இதற்காக சமீபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 3-வது ரயில் பாதையை சற்று தள்ளி அமைத்து, 2-வது நடைமேடைக்கான பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதனால் ரயில் நிலையத்துக்கு அருகில் வரும்போது, அனைத்து ரயில்களும் மெதுவாகவே செல்கின்றன. ரயில் நிலைய பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனினும், ரயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைமேடை அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது.
இந்த ஆகாய நடைபாதை என்பது ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் நேரடியாக ஜிஎஸ்டி சாலையை அணுகாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது. ஆகாய நடைபாதை, ரயில் நிலையத்தில் இருந்து சாலையை அணுகுவதற்கான பாதைகளை அமைப்பதில் தொய்வு ஏற்பட்டு இருப்பதால், புதிய ரயில் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.
எப்போது தான் திறக்கப்படும்
ஆகாய நடைபாதைக்கு நிலத்தை ஏற்படுத்துவதில் இருந்த பிரச்சினை நீங்கிவிட்டதாக சொல்லப்பட்டது. எனினும், இந்த ஆகாய நடைபாதை பணிகள் இன்னும் வேகம் எடுக்கவில்லை. ரயில்வே அதிகாரிகளிடம் இது குறித்து கேட்ட போது, 'கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலைய பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டன. 2-வது நடைமேடை பணிகளும் விரைவில் முடிவடைந்துவிடும்.
மாநில அரசு ஆகாய நடைபாதையை ரயில் நிலையத்துடன் இணைத்தால் மட்டுமே ரயில் நிலைய திறப்பு சாத்தியமாகும். அந்த பணிகள் ஜூலை மாதத்துக்குள் முடியும் என கூறியிருக்கிறார்கள். அதுவும் நிறைவுபெற்றால், ஜூலை மாதத்திற்குள் ரயில் நிலையம் திறக்கப்படும்" என்றார். முன்னதாக கிளாம்பாக்கம் ரயில் நிலையம் கடந்த மே மாதத்தில் திறக்கப்படும் என்று கூறப்பட்டது.
பயணிகள் எதிர்பார்ப்பு
பின்னர் ஜூன் மாதம் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது ஜூலை மாதம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். ஜூலை மாதத்திற்கு பிறகு வரிசையாக பண்டிகை நாட்கள் வருவதால், அதற்குள் இந்த ரயில் நிலையத்தை திறக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications