கிளாம்பாக்கம் டூ சென்னை.. ஏற்படும் சிக்கல்கள்.. சில நேரம் டவுன் பஸ்கள் இல்லாமல் போக என்ன காரணம்?
சென்னை: சென்னையை பொறுத்தவரை சில நேரங்களில் சில வழித்தடங்களில் பேருந்துகள் நீண்ட நேரம் வராத நிலை ஏற்படும்.. குறிப்பாக கிளாம்பாக்கம் டூ சென்னை டவுன் பஸ்கள் வரும் போது சில நேரங்களில் சிக்கல் ஏற்படுகிறது.. இதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் 30ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டது. அரசு விரைவு பேருந்துகள் மட்டும் கிளாம்பாக்கம் வந்து செல்லும் வகையில் இயக்கப்பட்டன. ஆனால் கடந்த பொங்கல் பண்டிகை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதேநேரம் ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல் இயங்கி வந்தன. இந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்க வேண்டும் என்றும், கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்கினால் கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்தது.
ஆனால் கிளாம்பாக்கத்தில் ஆம்னி பஸ்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை எனவும், தேவையான வசதிகளை ஏற்படுத்திய பின்னரே ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும் எனவும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் திட்டமிட்டபடி ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும் என்று போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியது.
இதையடுத்து நேற்று முதல் கோயம்பேட்டில் இயக்காமல் கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோல, தென் மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஆம்னி பஸ்கள், வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே வந்தபோது போக்குவத்து அதிகாரிகள் மற்றும் போலீசாரால் தடுத்து நிறுத்தப்படுகிறது. அப்போது, கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு இனி செல்லக்கூடாது எனவும், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு சென்று பயணிகளை இறக்கிவிட்டு அங்கேயே பஸ்களை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படியே நேற்று முதல் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரையே இயக்கப்படுகின்றன.
இனி கோயம்பேட்டிற்கு பதில் கிளாம்பாக்கத்தில் இருந்தே சென்னை மக்கள் ஏறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.. நேற்று முன்தினத்துடன் கோயம்பேடு பேருந்து நிலையம் விடைபெற்றுவிட்டது. தற்போதைய நிலையில் ஆம்னி பேருந்துகளில் அல்லது அரசு பேருந்துகளில் வருவோர் அரசு டவுன்பஸ்களில் ஏறி, தாங்கள் போக வேண்டிய இடத்திற்கு செல்கிறார்கள். இந்நிலையில் கிளாம்பாக்கம் ரூட்டில் செல்லும் சில வழித்தடங்களில் டவுன் பஸ்கள் போதிய அளவில் இருப்பது இல்லை என்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள் பொதுமக்கள். அரைமணி நேரம் வரை காத்திருந்தும் புலம்பும் நிலை இருப்பதாக சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். கிளாம்பாக்கம் போக பேருந்து தாமதமானால், கால் டாக்ஸியில் போக வேண்டிய நிலை இருப்பதாகவும் சிலர் வேதனை தெரிவிக்கிறார்கள்.

அரசு கிளாம்பாக்கத்தில் இருந்து சில வழித்தடங்களில் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறையும், சில வழித்தடங்களில் 10 நிமிடத்திற்கு ஒருமுறையும், சில வழித்தடங்களில் 15 நிமிடத்திற்கு ஒரு முறையும், ஒரு சில வழித்தடங்களில் மட்டும் 20 நிமிடத்திற்கு ஒரு முறையும் பேருந்துகளை இயங்கி வருகிறது. ஆனால் இதில் என்ன சிக்கல் என்றால், ஊரப்பாக்கம் சிக்னலில் காலை மற்றும் மாலை வேளைகளில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பேருந்துகள் ஊரப்பாக்கம் சிக்னலில் திரும்பி, வண்டலூர் பாலம் முடியும் வரை நெரிசலில் சிக்குகின்றன. இங்குதான் அதிக நேரம் ஆகிறது. இதன் காரணமாக ஒரே வழித்தடத்தில் உள்ள பேருந்துகள் வரிசையாக ஒரே நேரத்தில் செல்லும் நிலையும். அடுத்து பேருந்துகளே போகாத நிலையும் ஏற்படுகிறது.
கிளாம்பாக்கத்தில் மட்டுமல்ல.. சென்னைக்குள் உள்ள பல்வேறு சிக்கனலில் சிக்கும் பேருந்துகள், அடுத்தடுத்து ஒன்றாக செல்லும் நிலை ஏற்படுகிறது. இதுவே பல நேரங்களில் பேருந்துகள் சில வழித்தடங்களில் இல்லாத நிலைக்கு காரணமாக உள்ளது. இது கிளாம்பாக்கம் வந்த பிறகு ஏற்பட்டது அல்ல. கோயம்பேட்டில் பேருந்து நிலையம் இருந்த போதும், இப்படித்தான் சில வழித்தடங்களில் உள்ளோர் அவதிப்படும் நிலை இருந்தது. உதாரணமாக மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ஆவடி, திருவான்மியூர், சிறுசேரி, திருவெற்றியூர் வழித்தடங்களில் அதிகமான சிக்கல் ஏற்பட்டு வந்தது. இப்போதும் அதுபோல்தான் சிக்கல்கள் திருவான்மியூர், மந்தைவெளி உள்ளிட்ட சில வழித்தடங்களில் ஏற்படுகின்றன.












Click it and Unblock the Notifications