மழலையர், நர்சரி பள்ளிகள் நவ.1ல் திறக்கப்படாது - தமிழக அரசு அரசாணை வெளியீடு
மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்படலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் நவம்பர் 1 முதல் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது பள்ளி மாணவர்கள்தான். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகவே பள்ளி செல்லாமல் வீடுகளில் அடைபட்டு கிடந்தனர். கடந்த ஜனவரி மாதம் 9 முதல் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் சில வாரங்கள் மட்டுமே பள்ளிக்கு சென்றனர். தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமலேயே ஆல்பாஸ் ஆகி அடுத்த வகுப்புக்கு சென்று விட்டனர்.
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் கொரோனா தொற்று குறையத் தொடங்கியதை அடுத்து கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அரசின் வழிகாட்டுதலின்படி முறையாக நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளை தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நர்சரி பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு தவறானது.. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.. விளக்கம்
தமிழக அரசு கடந்த 14ஆம் தேதி கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது. அதில் நவம்பர் 1 முதல் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம். காப்பாளர், சமையலர் உள்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அறிவித்தது. நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிப்பை அடுத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் ப்ளே ஸ்கூல், எல்.கே.ஜி., யூ.கே.ஜி, உள்ளிட்ட நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது என்றும் இது குறித்த தெளிவான அறிக்கை விரைவில் வெளியடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கொரோனா தொற்று முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்றும் படிப்படியாவே பள்ளிகள் திறக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மூன்றாம் அலை கொரோனா குழந்தைகளை தாக்கும் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறப்பின் முன்னேற்பாடுகளில் பள்ளிக்கல்வித்துறை கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். மழலையர் நர்சரி மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படவில்லை. அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது பற்றி தான் முதல்வருடன் ஆலோசித்தோம் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் நவம்பர் 1 முதல் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.