திமுக அனுமதி எங்களுக்கு எதற்கு.. தவெகவுடன் கூட்டணியல்ல ஆதரவு மட்டுமே.. ஒரே போடாக போட்ட பெ.சண்முகம்
சென்னை: தமிழக அரசியலில் தவெக ஆட்சியமைப்பு தொடர்பான பரபரப்பு நீடித்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுக்கு வெளிநிலை ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. அதேசமயம், "இது கூட்டணி அல்ல, ஆட்சியமைப்பதற்கான ஆதரவு மட்டுமே" என்றும், "எங்கள் முடிவுக்கு திமுகவின் அனுமதி தேவையில்லை" என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, இடதுசாரி கட்சிகள் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அந்த வாய்ப்பை முடிவுரை செய்வதற்காக எங்களிடம் ஆதரவு கோரினார்கள். தமிழக மக்கள் ஜனநாயகத்தை முன்மொழிந்திருக்கிறார்கள். அதனை நாங்கள் வழிமொழிந்திருக்கிறோம்.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டம் நடைபெற்றது. இரண்டு கட்சிகளும் ஒரே மாதிரியான முடிவை இந்தப் பிரச்சனையில் எடுத்திருக்கிறோம். தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும், எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த சூழலில் தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அமைய வேண்டியது அவசியம்.
நாளை மறுநாள் 10 ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும். இல்லையெனில் கவர்னர் ஆட்சி என்பது அமல்படுத்த வேண்டும் என்ற நெருக்கடி மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கேட்டு தவெக தலைவர் ஜோசப் விஜய் அவர்கள் எங்களுக்கு கடிதம் அனுப்பினார்கள். அவர்களுடைய நிர்வாகிகள் நேரடியாக வந்து பேசினார்கள். கடிதம் மற்றும் எழுத்துப் பூர்வமாகவும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள்.
அதுதொடர்பாக இன்று நடைபெற்ற மாநில குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இப்போது இருக்கக்கூடிய நிலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைக்கவில்லை என்றால் ஆளுநர் ஆட்சி என்பதுதான் நடைமுறை சாத்தியம் என்கிற சூழல் உள்ளது. ஏற்கனவே தனிப்பெரும் கட்சி என்கிற முறையில் தவெகவை ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் அனுமதித்தியிருக்க வேண்டும்.
அதற்கு பதிலாக குறிப்பிட்ட எண்ணிக்கை இல்லை. 118 என்ற எண்ணிக்கையை கொடுத்தால் தான் ஆட்சி அமைக்க அழைப்பேன் என்று ஆளுநர் கூறியிருப்பது சட்ட விரோதமானது. இதன் மூலம் விஜய் ஆட்சி அமைப்பதை தடுக்கும் நடவடிக்கையில் தமிழக ஆளுநர் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆளுநர் ஆட்சி என்பது கொள்ளைப் புற வழியாக ஆட்சி செய்யும் நிலையே ஏற்படும்.
இந்த தேர்தலில் பிஜேபி, அதிமுக கூட்டணியை தோற்கடிப்பது என்பது தான் இந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் முக்கியமான கடமை. அதில் பிஜேபி முற்றிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே அவர்கள் வெற்றி அடைந்துள்ளனர். தேர்தலில் தோல்வி அடைந்தாலும், ஆளுநர் மூலமாக தமிழகத்தில் ஆட்சியை நடத்துவது என்கிற நோக்கத்தோடு தான் பாஜக இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
பாஜகவின் இந்த நோக்கத்தை முறியடிக்கம் நோக்கில் தவெக ஆட்சியமைப்பதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தருவது என்று தீர்மனித்திருக்கிறோம். அதே சமயத்தில் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம். வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது என்று தான் இரு கட்சிகளும் முடிவு செய்திருக்கிறோம். இன்னொரு தேர்தல், ஆளுநர் ஆட்சியை தடுப்பதற்காகவும் மட்டுமே தவெகவுக்கு ஆதரவு என்பதைத் தவிர வேறொரு அரசியல் நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்பதை உணர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
மேலும், எங்களோடு விசிக திருமாவளவனும் பங்கேற்பதாக இருந்து. ஏற்கனவே எங்கள் இரு கட்சிகளின் நிலைப்பாட்டை நான் அப்படியே ஆதரிக்கிறேன் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளார். தவெக ஆட்சி அமைக்க கூடாது என ஸ்டாலின் கூறவில்லை. தவெகவுடன் கூட்டணி இல்லை, ஆட்சிக்கு மட்டுமே ஆதரவு.
எங்கள் முடிவுக்கு திமுகவின் ஒப்புதல் தேவையில்லை. நாங்கள் தன்னிச்சையான கட்சிகள்.
மக்களுக்காக திமுகவுடன் இணைந்து பயணிப்போம். தமிழக உரிமைகளுக்காக குரல் எழுப்ப வேண்டும் என்பதே எங்களடைய நிபந்தனை. அமித்ஷா ஆட்சியை தடுக்கவே தவெகவுக்கு ஆதரவு அளித்தோம் என்று கூறினர்.












Click it and Unblock the Notifications