அதிமுகவினர் மீது எந்த தவறும் இல்லை.. கோடநாடு விசாரணையை கைவிட வேண்டும்: பாஜக அண்ணாமலை பேச்சு
சென்னை: கோடநாடு விசாரணையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 2017ல் இங்கு நடந்த கொள்ளை சம்பவம் அதை தொடர்ந்த கொலை சம்பவம் குறித்து குற்றவாளிகளிடம் மீண்டும் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. சயன் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் மீண்டும் போலீசார் புதிதாக வாக்குமூலம் பெற்று வருகிறார்கள்.
இந்த புதிய வாக்குமூலங்களால் வழக்கில் பெரிய அளவில் திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த போலீஸ் விசாரணையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து சயன் வாக்குமூலம் அளித்ததாகவும், சில தகவல்களை போலீசாரிடம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

அதிமுக
இந்த வழக்கில் மீண்டும் முதலில் இருந்து விசாரணை நடத்துவதற்கு அதிமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. கோடநாடு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கடந்த இரண்டு நாட்களாக சட்டசபையில் அவையை புறக்கணித்தனர். நேற்று முதல்நாள் திமுகவிற்கு எதிராக சட்டசபைக்கு வெளியே தர்ணா போராட்டமும் செய்தனர். அரசியல் காழ்புணர்ச்சியோடு திமுக செயல்படுகிறது, முடியும் நிலையில் இருக்கும் வழக்கை பழி வாங்கும் நடவடிக்கையாக மீண்டும் திமுக விசாரணைக்கு எடுத்துள்ளது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி இருந்தார்.

அண்ணாமலை
இந்தநிலையில் கோடநாடு விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, கோடநாடு வழக்கில் அதிமுகவினர் மீது எந்த தவறும் இல்லை. முடித்து வைக்கப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வரின் பெயரை சேர்த்து இருக்கிறார்கள். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி. அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாக வழக்கை மீண்டும் விசாரிக்கிறார்கள்.

பேட்டி
கோடநாடு விவகாரம், பாஜகவினர் மீது பழி போடுவது, நடவடிக்கை எடுப்பது இது போன்ற பழி வாங்கும் நடவடிக்கைகளை அரசு உடனே கைவிட வேண்டும். கோடநாடு விசாரணையை கைவிட்டுவிட்டு மக்களுக்கான நலத்திட்ட பணிகளை மேற்கொள்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். முடித்து வைக்கப்பட்ட ஒரு வழக்கில் மீண்டும் அதிமுக உறுப்பினர்களின் பெயர்களை சேர்த்துள்ளனர்.

திமுக
தமிழ்நாட்டில் திமுக அரசின் ஆட்சி இனிப்பு, கசப்பு, காரம் கலந்து இருக்கிறது. கொரோனா இரண்டாவது அலைக்கான தடுப்பு நடவடிக்கையை மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசும் இணைந்து மேற்கொண்டது. இது இனிப்பான விஷயம். ஆனால் தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றாதது, ஒன்றிய அரசு என்று கூறியது தொடங்கி நிறைய தவறான விஷயங்களை பேசியது, பாஜக தொண்டர்களை கைது செய்தது அவர்கள் மீது பொய்யான நடவடிக்கை எடுத்தது இதெல்லாம் கசப்பு மற்றும் காரமான விஷயம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சயன்
இந்த வழக்கு விசாரணை தீவிரம் அடைந்து வரும் நிலையில் நேற்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தை சந்தித்தனர். அடுத்தடுத்து நடக்கும் இந்த சம்பவங்களால் தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த வழக்கில் வரும் நாட்களில் பெரிய திருப்பங்கள் ஏற்படலாம். சயன் மீது இந்த வழக்கில் வரும் நாட்களில் மேலும் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இவரை போலீஸ் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. அவர் மட்டுமின்றி இன்னும் இந்த வழக்கில் பல முக்கியமான நபர்கள் விசாரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற நபர்களிடம் இருந்து புதிய வாக்குமூலம் பெறப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications