விரைந்து நடவடிக்கை எடுங்க.. கோடநாடு விவகாரத்தை கையில் எடுத்த ஓபிஎஸ்.. ஆக.1-ல் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் வரும் ஆகஸ்ட் 1-ல் போராட்டம் நடைபெறும் என ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ளது கோடநாடு எஸ்டேட். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரைக்கும் அவ்வப்போது இங்கு ஓய்வு எடுப்பது வழக்கம். ஜெயலலிதா மறைந்த பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி அதாவது எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் அங்கு கொள்ளை முயற்சி நடந்தது. இதில், அந்த எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளை போனது என்ன? எதற்காக கொள்ளை நடந்தது அதற்கான சூத்திரதாரி யார் என்பதில் பல மர்மங்கள் உள்ளன.
கோடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை கொள்ளைக்குப் பிறகு அடுத்தடுத்து நடந்த விபத்துகள், தற்கொலைகள், மரணங்கள் பலவித சந்தேகங்களை கிளப்பின. அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற விசாரணையில் உருப்படியாக எதுவும் சிக்கவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது.
தொழிலதிபர் செந்தில்குமார், அவரது தந்தை தொழிலதிபர் ஆறுமுகசாமி, கோவையைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, புதுச்சேரி சொகுசு விடுதி உரிமையாளர் நவீன்பாலாஜி உள்ளிட்ட சிலரிடம் அடுத்தடுத்து விசாரணை நடத்தப்பட்டது. சிபிசிஐடி தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறது. நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தரப்பு திடீரென கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தரப்பினர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- ஜெயலலிதா அவர்கள் விரும்பி வசித்து வந்த இடமாக கோடநாடு இருந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதாவது கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி அன்று இரக்கமில்லா ஓர் அரக்கர் கூட்டம் கோடநாடு தோட்டத்துக்குள் புகுந்தது.
அந்த கூட்டம் தோட்டத்தை காவல் காத்து வந்த காவலாளி ஓம்பதூரை கொலை செய்தது. கோடநாட்டில் கொலை, கொள்ளை சம்பவத்தை அந்த கூட்டம் நடத்தி சென்றது. இந்த கொலை, கொள்ளை எதற்காக நடந்தது என்று கண்டறியும் முன்பாகவே ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனரான கனகராஜ் கொலை செய்யப்பட்டார். அதேபோல் கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி மற்றும் கணினி உள்ளிட்ட பொறுப்பினை கவனித்து வந்த தினேசும் கொலை செய்யப்பட்டார். இவ்வாறாக இந்த வழக்கில் அடுத்த்தடுத்து 6 பேரின் உயிர்கள் பறிபோகியது.
ஆனால் சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கில் முன்னேற்றம் இல்லை. இந்தக் குற்றத்தை முன்னின்று நடத்திய கொடூரன் யார் என்கிற முடிச்சும் இன்று வரை அவிழ்க்கப்பட வில்லை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரத்தில் தி.மு.க. அரசு கூடுதல் கவனமும், முக்கியத்துவமும் கொடுக்காமல் தூங்கி வழிவதைக் கண்டித்தும், இந்த வழக்கினை விரைந்து விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பாக மாநிலம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் வரும் ஆகஸ்டு 1-ந்தேதி அன்று காலை 10.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications