எம்ஜிஆரின் கார் நம்பரை பயன்படுத்திய கோடநாடு கொள்ளை கும்பல்.. என்ன காரணம்? பரபரப்பு தகவல்
சென்னை: கோடநாட்டில் கொலை மற்றும் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட கும்பல் எம்ஜிஆர் பயன்படுத்திய கார் நம்பரை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தோண்ட தோண்ட பூதங்களாக வெளி வந்து கொண்டு இருக்கிறது. சினிமாவில் காட்டப்படுவதை விட மோசமாக பல திருப்பங்களுடன் இந்த வழக்கு சென்று கொண்டு இருக்கிறது. முன்னாள் முதல்வர் வீட்டில் கொலை மற்றும் கொள்ளை.. அந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களின் அடுத்தடுத்த மர்ம மரணம் என்று கோடநாடு வழக்கு திகிலுக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.
இன்றுதான் சந்தோஷ் சாமி என்ற கோடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சாட்சியத்தின் பேட்டி ஊடகங்களில் வெளியானது. செபி என்ற நபர்தான் கோடநாடு வழக்கின் முதல் குற்றவாளியான கனகராஜை கொலை செய்ய சொன்னதாக சந்தோஷ் சாமி பேட்டி அளித்துள்ளார்.

பரபரப்பு
இந்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் தற்போது புதிய திருப்பமாக கோடநாட்டில் கொலை மற்றும் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட கும்பல் எம்ஜிஆர் பயன்படுத்திய கார் நம்பரை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கும்பல் தங்கள் கார் நம்பர் பிளேட்களை மாற்றி பயன்படுத்துவது வழக்கம். அதேபோல்தான் இவர்களும் கார் நம்பர் பிளேட்டை மாற்றி பயன்படுத்தி உள்னனர்.

கொலை
2017 ஏப்ரல் 24ம் தேதி கோடநாட்டில் கொள்ளை அடித்துவிட்டு கும்பலில் ஒரு பிரிவினர் கூடலூர் வழியாக கேரளா தப்பி செல்ல முயன்று உள்ளனர். அப்போது கேரளா எல்லையில் தமிழ்நாடு போலீசார் இந்த கும்பலை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். இரண்டு காரில் வந்தவர்களை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதன்பின் சிலரின் தலையீடு காரணமாக இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் இதில் ஒரு காரில் பதிவெண் TN 43 R 4777 என்று இருந்துள்ளது.

பதிவெண் TN 43 R 4777
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பயன்படுத்திய காரின் பதிவெண் ஆகும். இந்த கோடநாடு கொள்ளை கும்பல் எம்ஜிஆர் கார் நம்பரை பொய்யாக பயன்படுத்தி கொள்ளையில் ஈடுப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனகராஜ் ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநர் ஆவார்.

மாற்றினார்
இவர்தான் கோடநாடு கொள்ளை கும்பலின் காரில் பதிவெண்ணை மாற்றி கொடுத்துள்ளார். அதில் ஒரு காரில் TN 43 R 4777 என்று கனகராஜ்தான் மாற்றிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. கோடநாடு வழக்கில் திடீரென இந்த எம்ஜிஆர் பதிவெண் பல கேள்விகளை, குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் ஏன் சரியாக எம்ஜிஆர் பதிவெண்ணை பயன்படுத்தி கொள்ளையடித்தனர்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

காரணம் என்ன?
கனகராஜ் எம்ஜிஆரின் கார் பதிவு எண்ணை தேர்வு செய்தது ஏன்? போலீசார் கூடலூரில் இவர்களை கைது செய்யாதது ஏன்? என்று பல கேள்விகள் எழுந்து இருக்கின்றன. இந்த வழக்கில் விசாரணை செல்ல செல்ல பல புதிய தகவல்கள் வெளி வந்து கொண்டு இருக்கின்றன... இதனால் விரைவில் இந்த வழக்கில் பெரிய திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications