ஸ்டாலின் ஆக்சன்.. விஜிலன்ஸ் ரெய்டு! கோடநாடு கேஸ்! குறிவைக்கப்பட்ட "எடப்பாடி டீம்".. அப்போ கன்பார்மா?
சென்னை: அதிமுகவில் எடப்பாடி ஆதரவாளர்களாக இருக்கும் நிர்வாகிகள் அடுத்தடுத்து குறி வைக்கப்பட்டு வருகிறார்கள். கோடநாடு வழக்கிலும் விசாரணை சூடு பிடித்துள்ளதால், எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆளும் திமுக மூலம் குறி வைக்கப்பட்டுள்ளதோ என்று கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
அதிமுக மீண்டும் ரெய்டு.. வழக்கு விசாரணைகளை சந்திக்க தயாராகி வருகிறது. நேற்று முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் நண்பர்களான செய்யாதுரை,சந்திரசேகர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.
ஏற்கனவே வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்பட்ட போதே இவர்கள் இருவர் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் வீட்டில் அப்போதும் ரெய்டு நடத்தப்பட்டது.

வேலுமணி
இதில் சந்திரசேகர் மீது வழக்கும் பதியப்பட்டது. இந்த நிலையில்தான் அதிமுகவில் பொதுக்குழு பிரச்சனை ஓடிக்கொண்டு இருக்கும் நேரம் பார்த்து அவரின் வீட்டில் வருமானவரித்துறை இரண்டு நாட்களாக ரெய்டு நடத்தியது. ஆனால் இது மாநில அரசு மூலம் நடத்தப்படும் ரெய்டு கிடையாது. இதன் சூடு தணியும் முன் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் மாஜி அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

காமராஜ் ரெய்டு
காமராஜுக்கு தொடர்பான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. இந்த எப்ஐஆரில் காமராஜ் ஏ1 ஆக சேர்க்கப்பட்டு உள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் காமராஜின் மகன்கள் இனியன், இன்பன் ஆகியோர்கள் முறையே ஏ2, ஏ3 ஆக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த சோதனை இன்று மட்டுமில்லாமல் நாளையும் நடக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த 10 வருடத்தில் வருமானத்திற்கு அதிகமாக 58,44,38,252 ரூபாய் சொத்து சேர்த்ததாக காமராஜ் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது

கோடநாடு
அதிமுக தரப்பில் இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் எடப்பாடி ஆதரவாளர்களாக இருக்கும் நிர்வாகிகள் அடுத்தடுத்து குறி வைக்கப்பட்டு உள்ளனர். கோடநாடு வழக்கிலும் விசாரணை சூடு பிடித்துள்ளதால், எடப்பாடி பழனிசாமி தரப்பு குறி வைக்கப்பட்டுள்ளதோ என்று கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் கோடநாடு வழக்கில் தற்போது விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இது தொடர்பாக மற்ற மாநிலங்களில் விசாரணை நடத்த தமிழ்நாடு போலீஸ் கால அவகாசம் கேட்டுள்ளது.

விசாரணை தீவிரம்
கோடநாடு வழக்கில் நேற்று மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் மகனிடம் விசாரணை நடத்தப்பட்டது. கோடநாட்டில் காணாமல் போன ஆவணங்கள் சென்னையில் வருமானவரித்துறை சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் வரும் நாட்களில் முக்கியமான புள்ளிகள் விசாரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

வழக்குகள் தூசி தட்டப்பட்டது
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஆகும் பட்சத்தில் அவரை ஆளும் திமுக தரப்பு குறி வைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. முக்கியமாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கோடநாடு வழக்கு மற்றும் அவருக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் தூசி தட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதை பயன்படுத்தி எடப்பாடி மற்றும் அதிமுகவை ஆளும் திமுக தரப்பு முடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வழக்குகள் விசாரணை
தற்போது எதிர்பார்த்தபடியே கோடநாடு வழக்கும் தூசி தட்டப்பட்டுள்ளது. அதேபோல் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினருமான காமராஜ் வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது. முன்னதாக ஓ பன்னீர்செல்வம் சார்பாக ஆளும் தரப்பிடம் உதவி கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. அதிமுக பொதுக்குழுவை தடுத்து நிறுத்த ஓ பன்னீர்செல்வம் தரப்பு முதல்வர் ஸ்டாலின் தரப்பிடம் உதவி கேட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் எடப்பாடிக்கு நெருக்கமான ஆதரவாளர் காமராஜ் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் குறி வைக்கப்பட்டு இருக்கிறார்.











Click it and Unblock the Notifications