அதிமுக செய்யாததை நீங்களாவது செய்யுங்கள்... ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கும் கொங்கு ஈஸ்வரன்..!
சென்னை: ஆகஸ்ட் 15-ம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிராம வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்கு கிராம சபைக் கூட்டம் தான் சரியான தளம் என அவர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அதிமுக ஆட்சி
அதிமுக ஆட்சியில் கொரோனா தொற்று பரவலை காரணம் காட்டி கிராம சபை கூட்டம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. அதிமுக ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் பொதுமக்கள் இருந்ததும் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணமாக அப்போது பலராலும் பேசப்பட்டது.

விவாதிக்கும் இடம்
கிராம சபை கூட்டமென்பது கிராம பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து அதை நிவர்த்தி செய்வதாகும். கிராம பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள் பற்றி விவாதிக்க கூடியதும் கிராம சபை கூட்டம் தான். அதேபோல கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களால் நிறைவேற்றப்படும் தீர்மானத்திற்கு தனி ஒரு அதிகாரம் இருக்கிறது.

மக்கள் பிரச்சனைகள்
தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடைபெறாத காரணத்தால் கிராம பகுதிகளின் வளர்ச்சி தடைப்பட்டு இருக்கிறது. பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் அப்படியே கிடப்பில் இருக்கிறது. கொரோனா பரவலின் 3-ம் அலைக்கான முன்னெச்சரிக்கை விழிப்புணர்வை ஆகஸ்ட் 15-ஆம் தேதி கிராம சபை கூட்டத்தின் வாயிலாக கிராம பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஏற்படுத்த முடியும்.

கோரிக்கை
தமிழக முதலமைச்சரின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் மற்றும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளையும் கிராம சபை கூட்டத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் அனைத்துதரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்க முடியும். எனவே தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதலின் படி ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சபை கூட்டத்தை நடத்திட தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications