இந்த பாவம் உங்களுக்கு வேண்டாம்; கோடிக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்; எச்சரிக்கும் கொங்கு ஈஸ்வரன்!
சென்னை: வரலாறு காணாத வகையில் நூல் விலை உயர்ந்துள்ளதால் ஜவுளித்துறையில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்திருக்கிறார் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன்.
உள்நாட்டு தேவைக்கு போகத்தான் வெளிநாடுகளுக்கு நூல் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் எனவும் மத்திய அமைச்சரின் அறிவிப்பு துளியும் நம்பிக்கை தரவில்லை எனவும் சீறியிருக்கிறார் அவர்.
இது தொடர்பாக கொங்கு ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நூல் விலை
வரலாறு காணாத அளவிற்கு சற்றும் எதிர்பாராத சூழ்நிலையில் நூல் விலை கட்டுக்கடங்காமல் ஏறி இருக்கிறது. துணி தயாரிப்பு தொழிலிலும், ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிலிலும் ஈடுபட்டு இருக்கின்ற சிறு, குறு தொழிற்சாலைகள் ஒப்புக்கொண்ட ஆர்டர்களை நிறைவேற்றுவதில் மிகப்பெரிய சிரமத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். 25% முதல் 40% வரை நூல் விலை ஏறி இருக்கிறது.

பஞ்சு விலை
துணி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டு இருக்கின்றவர்கள் புதிய விலையில் நூலை வாங்கி தங்கள் ஏற்றுமதி கடமைகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். பஞ்சு விலை ஏற்றம் இதற்கான காரணம் அல்ல. கட்டுப்படுத்தப்படாத நூல் ஏற்றுமதி தான் இதற்கான காரணம். உள்நாட்டில் ஜவுளித் தொழில் ஈடுபட்டு இருக்கின்ற சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நூலை இருப்பில் வைத்து தான் ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும்.

ஏற்றுமதி
பல நாடுகள் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி தொழிலை அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதால் நாம் பலியாகி விடக்கூடாது. நூல் ஏற்றுமதிக்கான அரசு ஊக்க சலுகைகளும் உள்நாட்டு தொழிலை கவனத்தில் கொள்ளாமல் நிர்ணயித்து இருப்பது இதற்கான காரணமாக அமைகிறது. அதை எல்லாம் கணக்கிடும் போது உள்நாட்டில் விற்பதை விட ஏற்றுமதியில் அதிக லாபம் கிடைக்கின்ற காரணத்தினால் இந்தியாவில் உற்பத்தியாகும் நூலை அதிகமாக ஏற்றுமதி செய்ய முயற்சிக்கிறார்கள்.

நம்பிக்கையில்லை
துணி உற்பத்தி மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியில் நாட்டில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு இருக்கின்றார்கள். தற்போதைய நூல் விலையின் ஏற்றம் நிலை தொடர்ந்தால் கோடிக்கணக்கான ஏழை எழியவர் வேலை இழக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் மரியாதைக்குரிய பியூஷ் கோயல் அவர்களுடைய நேற்றைய அறிவிப்பு சிறு, குறு தொழில் துறையினரிடம் மிகுந்த அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலை இழப்பு
இதற்கான தீர்வை தாமதப்படுத்தாமல் உடனடியாக காண வேண்டும். நிலைமை கை மீறி சென்று கொண்டிருக்கின்றது. மத்திய, மாநில அரசுகள் இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் பெரும் அளவில் வேலை இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.












Click it and Unblock the Notifications