பாஜக அரசுக்கு கொங்கு ஈஸ்வரன் திடீர் பாராட்டு! கூட்டணி ரூட்டில் மாற்றம்? பின்னணி என்ன?
சென்னை: மத்திய பாஜக அரசு மீது எப்போதும் பாய்ச்சல் காட்டும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், இப்போது திடீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடைவிதித்திருப்பது இந்திய அரசு சரியான நடவடிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் ஈஸ்வரன் அங்கம் வகித்து வரும் சூழலில், பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை தொடர்பான அவரது அறிக்கையில் மத்திய அரசை பாராட்டியிருக்கிறார். அதன் விவரம் வருமாறு;
மகாராஷ்டிரா.. ஏக்நாத் ஷிண்டே விரைவில் மும்பை ரிட்டர்ன்.. பாஜக ஆட்சியை உருவாக்க பிளான்?
பிளாஸ்டிக் பொருட்கள்
''கடந்த பல வருடங்களாக ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பதற்கு தடை என்ற நிலை இருந்து வந்தது. மக்கள், சமூக ஆர்வலர்கள் விற்பனைக்கு தடை என்பதை விட உற்பத்திக்கு தடை விதித்தால் எதிர்பார்க்கின்ற தீர்வு கிடைக்கும் என்ற பரிந்துரைகளை சொல்லி வந்தனர். இந்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் காதுக்கு இந்த கோரிக்கைகள் சென்று சேர்ந்து எதிர்பார்த்தது நடந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.''
சரியான நடவடிக்கை
''உற்பத்தியை நிறுத்தினால் விற்பனை தானாக நின்று போகும் என்பதை எல்லோரும் அறிவர். இந்திய அரசு சரியான நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது. எந்த தயவு தாட்சணையும் இல்லாமல் இந்தியா முழுவதும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தடுக்கப்படவேண்டும்.''
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
''சட்டம் அனைவருக்கும் சமம் என்ற நிலையில் இரும்புக்கரம் கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி ஆலைகள் மூடப்படுமென்றால் சுற்றுச்சூழல் கண்டிப்பாக பாதுகாக்கப்படும். அதே சமயத்தில் ஆராய்ச்சியாளர்கள் முடுக்கி விடப்பட்டு பிளாஸ்டிக் பைகளுக்கு இணையான சரிசமமான விலையுள்ள பொருட்கள் உருவாக்கப்பட வேண்டும்.''
கொமதேக
''ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை அறிவிப்பு சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்கான முதலில் எடுத்து வைத்திருக்கின்ற தீவிரமான நடவடிக்கையாகும். அதை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக வரவேற்கின்றோம்.''