கோவை மக்கள் தைரியமாக உள்ளார்கள்! சில அரசியல்வாதிகள் தான் பயப்படுகிறார்கள்! பாஜகவை பந்தாடும் ஈஸ்வரன்!
சென்னை: காவல்துறை நடவடிக்கைகளையும், அரசின் உறுதியையும் புரிந்து கொண்ட கோவை மக்கள் தைரியமாக இருக்கிறார்கள் என்றும் சில அரசியல்வாதிகள் தான் பயப்படுகிறார்கள் எனவும் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று அறிவுறுத்துவதிலே தவறு இல்லை என்றும் ஆனால் மக்கள் மத்தியில் பயத்தை விதைப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாஜக நிர்வாகிகளை சூசகமாக சாடி கொங்கு ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ஒரே மாநிலம்.. “இரட்டை ஆபரேசன்!” ஆடியோ லீக்.. “புரோக்கர்”- ஆர்எஸ்எஸ், பாஜகவை சாடிய தமிழ்நாடு எம்பி
மக்களுக்கு தைரியம்
கோவையில் வாழுகின்ற அனைத்து தரப்பினரும் எந்தவிதமான பயமும் இல்லாமல் சுமுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காவல்துறை பார்த்துக் கொள்ளும் என ஒரு முழு நம்பிக்கையோடு இருக்கின்றார்கள். தமிழக முதலமைச்சர் அவர்கள் மூன்று புதிய காவல் நிலையங்களுக்கு உத்தரவிட்டும், அதிகப்படியான காவல் துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார்.
பயத்தை உருவாக்காதீர்
காவல் துறையினருடைய கண்காணிப்பு வலுவாக இருந்த காரணத்தினால் தான் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இந்த துயர சம்பவம் நடந்திருக்கிறது. காவல் துறையினருடைய நடவடிக்கைகளையும், அரசின் உறுதியையும் புரிந்து கொண்ட கோவை மக்கள் தைரியமாக இருக்கிறார்கள். எப்போதும் போல வாழ்க்கையை நடத்துகிறார்கள். ஆனால் சில அரசியல்வாதிகள் தான் பயப்படுகிறார்கள். அந்த பயத்தை மக்கள் மீது திணிக்க முயற்சியும் செய்கிறார்கள்.
அமைதியாக வாழ
யாரும் பயப்பட வேண்டியது இல்லை என்பதைத்தான் தமிழக காவல்துறை அனைவரையும் கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசோடு நின்று மக்களின் பயத்தை போக்க வேண்டும். மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதுதான் அனைத்து அரசியல் தலைவர்களுடைய எதிர்பார்ப்பும், நோக்கமுமாக இருக்க வேண்டும். யாராக இருந்தாலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று அறிவுறுத்துவதிலே தவறு இல்லை. ஆனால் மக்கள் மத்தியில் பயத்தை உருவாக்குகிற விதைகளை விதைப்பதை தவிர்க்க வேண்டும்.
அழுத்தம் தர வேண்டாம்
தமிழக காவல்துறை தமிழக முதலமைச்சருக்கு தான் அவ்வப்போது செய்திகளையும், நிலவரங்களையும் பகிர்வார்களோ தவிர அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பகிர முடியாது. இதுபோன்ற விஷயங்கள் அரசியல் கட்சித் தலைவர்களை விட முன்னால் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். தமிழக காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமையின் உடைய விசாரணைக்கு உரிய கால அவகாசத்தை கோவை பகுதி பொதுமக்கள் கொடுக்க வேண்டும். பொதுமக்களுடைய நடவடிக்கைகள் எக்காரணம் கொண்டும் அதிகாரிகளுக்கு ஒரு விதமான அழுத்தத்தை கொடுத்து விடக்கூடாது.