அன்று லண்டனிலிருந்து ஆண்டார்கள்! இன்று டெல்லியிலிருந்து ஆள முயற்சிக்கிறார்கள்! சீறிய கொங்கு ஈஸ்வரன்!
சென்னை: சுதந்திரத்துக்கு முன்பாக லண்டனிலிருந்து நம்மை ஆட்சி செய்ததை போல் இப்போது டெல்லியிலிருந்து ஆட்சி செய்ய முயற்சிக்கிறார்கள் என மத்திய பாஜக அரசை சாடியிருக்கிறார் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன்.
Recommended Video
நீட் தேர்வை நீர்த்து போகச் செய்யும் வரை தமிழக அரசு ஆகச்சிறந்த அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
நீட் விலக்கு மசோதா மீதான விவாதத்தின் போது சட்டப்பேரவையில் இவ்வாறு தனது கருத்தை பதிவு செய்தார் கொங்கு ஈஸ்வரன்.

8 கோடி தமிழர்கள்
நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்பது 8 கோடி தமிழர்களின் ஒருமித்த முடிவு என்றும் ஆனால் ஆளுநரை பொறுத்தவரை தனது கடிதத்தில், 'நான்' 'நான்' என்ற வார்த்தையை குறிப்பிட்டுள்ளதுடன் 8 கோடி தமிழர்களின் விருப்பத்தை நிராகரித்திருப்பது தமக்கு மிகுந்த மன வேதனையை தருவதாக கூறியிருக்கிறார். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் மருத்துவர்கள் ஆகக் கூடாதா என ஆளுநருக்கு கேள்வி எழுப்பிய அவர், ஆளுநர் ரவியின் கடிதம் உள்நோக்கத்துடன் இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

மாநில உரிமைகள்
மேலும், ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை, ஒரே பத்திரப்பதிவு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்ற சட்டத்திருத்தம் என மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார். இந்திய அளவில் மாநில உரிமைகளை காப்பாற்றக் கூடிய ஒரு அமைப்புக்கு தலைமையேற்க கூடிய தகுதி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உள்ளதாக ஈஸ்வரன் தெரிவித்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் என்றும் ஆனால் இன்று அவரே மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் எனவும் கொங்கு ஈஸ்வரன் சாடினார். சுதந்திரத்துக்கு முன்பாக லண்டனில் இருந்து இந்தியாவை ஆட்சி செய்யப்பட்டது போல் இப்போது டெல்லியிலிருந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆட்சி செய்யும் முயற்சி தொடங்கியிருப்பதாக மத்திய பாஜக அரசை சாடினார்.

அரசுப் பள்ளிகள்
மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஏழரை சதவீத இட ஒதுக்கீட்டை 15 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என அரசை கேட்டுக்கொண்டார். சட்டமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வரவேற்பும், ஆதரவும் அளிப்பதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications