கொங்கு மண்டலத்தில் இப்படியொரு நிகழ்வு நடந்ததில்லை! தொழில் செய்பவர்களுக்கு பயத்தை தருகிறது -ஈஸ்வரன்
சென்னை: கொங்கு மண்டலத்தில் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அச்சத்தை உண்டாக்குகின்ற நிகழ்வாக, நாமக்கல் நிதி நிறுவன அதிபரின் கொலை அமைந்துள்ளது என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எப்போதும் நடக்காத நிகழ்வு நடந்த காரணத்தினால் காவல்துறை கண்காணிப்புகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கொமதேக
நாமக்கல் மாவட்டம், வெப்படை பகுதியில், பாதரை என்ற கிராமத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் இளைஞரணி பொறுப்பாளர் தம்பி கௌதமை கடத்தி கொலை செய்திருப்பது வேதனைக்குரியது. தம்பி கௌதமின் மரணம் தீர்க்க முடியாத வேதனையை உருவாக்கி இருக்கிறது. காவல்துறைக்கு இது ஒரு எச்சரிக்கை.

நடக்க கூடாத நிகழ்வு
கொங்கு மண்டலத்தில் நிகழ்காலத்தில் இப்படி ஒரு கடத்தலும், கொலையும் நடந்ததில்லை. கடத்திய உடன் காவல்துறை களத்தில் இறங்கி பத்திற்கும் மேற்பட்ட தனிப்படையை போட்டு தேடியபோதும் கௌதமின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. கொலையாளிகள் காவல்துறையை ஏமாற்றிவிட்டு தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். நடக்க கூடாத ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.

ஆள் கடத்தல்
கொங்கு மண்டலத்தில் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அச்சத்தை உண்டாக்குகின்ற நிகழ்வாக இது நடந்திருக்கிறது. திறமையான காவல்துறை அதிகாரிகள் நாமக்கல் மாவட்டத்தில் இருந்தும் ஆள் கடத்தல் காரர்கள் பயமில்லாமல் இந்த கொடூர கொலையை நடத்தி இருக்கிறார்கள். காவல்துறைக்கு அவர்களுடைய கண்காணிப்பு இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்று ஒரு எச்சரிக்கையை இந்த கொலை சம்பவம் கொடுத்திருக்கிறது.

அதிகபட்ச தண்டனை
எப்போதும் நடக்காத நிகழ்வு நடந்த காரணத்தினால் காவல்துறை கண்காணிப்புகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். மீண்டும் இப்படி ஒரு நிகழ்வு தமிழகத்திலேயே எங்கும் நடக்கக்கூடாது. கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தந்து இப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர்களுக்கு அச்சத்தை உண்டாக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications