ரிசார்ட்டை புக் பண்ணுங்க.. எம்பிக்களை தூக்குங்க.. தேசிய அளவில் தொடங்கும் கூவத்தூர் அரசியல்? போச்சு
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் ரிசார்ட் அரசியல் நடக்கும் வாய்ப்புகள் அதிகம் ஆகி உள்ளன. அடுத்த சில நாட்களுக்கு இந்திய அரசியல் பெரும் பரபரப்பாக காணப்படும் வாய்ப்புகள் உள்ளன.
இந்திய அரசியலில் கூவத்தூர் நாடகம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை தக்க வைக்க சசிகலா - ஓ பன்னீர்செல்வம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதன் விளைவாக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டனர். இந்திய அரசியலில் இந்த கூவத்தூர் அரசியல் பெரிய அளவில் கவனம் பெற்றது. அதன்பின் மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் இதே ரிசார்ட் அரசியல் பரவியது.
பின்னர் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்திற்கும், கோவாவிற்கும் கூட இதே ரிசார்ட் அரசியல் பரவியது. தொங்கு சட்டசபை, அதன்பின் குதிரை பேரம், ஆட்சியை தக்க வைக்க கோடிகளில் பணம் கொடுப்பது, எம்எல்ஏக்களை ரிசார்ட்டில் தங்க வைப்பது என்று மிகப்பெரிய அரசியல் நாடகங்கள் நாடு முழுக்க அரங்கேற தொடங்கின.
ரிசார்ட் அரசியல்: இப்போது தேசிய அரசியலில் இதே கூவத்தூர் அரசியல்... ரிசார்ட் அரசியல் அரங்கேறும் வாய்ப்புகள், சூழல்கள் ஏற்பட்டு உள்ளன. 2024 லோக்சபா தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் உருவாவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன. தேசிய அளவில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளது.
2024 லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.
இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 280 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜக தனியாக 230 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 98 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 230 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தொங்கு நாடாளுமன்றம்: இப்போது உள்ள சூழலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பே இல்லை என்றே கருதப்படுகிறது. தனி மெஜாரிட்டி பெற பாஜகவிற்கு 40 இடங்களுக்கு மேல் இன்னும் கிடைக்க வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவாகவே கருதப்படுகிறது. இதனால் கண்டிப்பாக தேசிய அளவில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.
பாஜகவிற்கு தனியாக மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் அவர்கள் ஆட்சி அமைப்பது கடினம். ஏனென்றால் மோடி பிரதமர் ஆவதற்கு என்டிஏ கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்காமல் போகலாம். உதாரணமாக நிதிஷ் குமாரின் ஜேடியூ பீகாரில் 15 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆந்திர பிரதேசத்தில் 14 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இவர்கள் என்டிஏ கூட்டணிதான்.
இவர்களை காங்கிரஸ் இந்தியா கூட்டணி தங்கள் பக்கம் இழுக்க பார்க்கலாம். என்டிஏ கூட்டணியை உடைக்க காங்கிரஸ் ஆலோசனைகளை செய்யலாம். சில காட்சிகளை உடைக்க பாஜக கூட முயற்சி செய்யலாம். இதனால் பலர் ரிசார்ட் கொண்டு செல்லப்படலாம் .
நெருக்கம் இல்லை: சந்திர பாபு நாயுடு , நிதிஷ் குமார் மோடியுடன் அத்தனை நெருக்கம் இல்லை. பாஜகவை ஆதரித்தாலும் மோடியை தனிப்பட்ட வகையில் கடுமையாக எதிர்க்க கூடியவர்கள். சந்திரபாபுநாயுடு எல்லாம் ஒரு காலத்தில் கடுமையாக மோடியை எதிர்த்தவர். இப்படிப்பட்டவர்கள் மோடி பிரதமர் ஆக எதிர்க்கலாம். ஏன் சமயங்களில் என்டிஏ கூட்டணியை உடைத்துவிட்டு இந்தியா கூட்டணிக்கு கூட செல்லலாம். இன்னும் சொல்லப்போனால் நிதிஷ் அல்லது சந்திர பாபு நாயுடு பிரதமராக முன்னிறுத்தப்பட்டு இந்தியா கூட்டணி கூட ஆட்சி அமைக்கலாம்.












Click it and Unblock the Notifications