கோயம்பேடு மீண்டும் பிஸி.. கிளாம்பாக்கத்திலும் ரெடி.. தமிழக அரசின் ஸ்பெஷல் பஸ்கள்.. சர்ப்ரைஸை பாருங்க
சென்னை: வார இறுதி நாட்கள் துவங்கியிருக்கும் நிலையில், தமிழக போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.
வேலைநிமித்தம், கல்வி, உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, சொந்த ஊரிலிருந்து பொதுமக்கள் நகரங்களுக்கு கிளம்பி செல்வது வழக்கம்.. அதன்படி, சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர் போன்ற தொழிற்நகரங்களில் வெளியூர் மக்கள் ஏராளமானோர் தங்கியிருக்கிறார்கள்.

எனவே, இவர்கள் வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் வழக்கம். தற்போது கோடை விடுமுறை முடிந்திருந்தாலும், வாரவிடுமுறை ஆரம்பமாகி உள்ளது.. அதுவும் இல்லாமல், முகூர்த்த நாட்களும் வரஉள்ளன.. இதுபோன்ற நாட்களில் பஸ்கள், ரயில்கள் என எல்லா இடங்களிலும் நெரிசல் காணப்படும்..
ஸ்பெஷல் பஸ்: எனவே, பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துக் கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில், இந்த வாரமும் ஸ்பெஷல் பஸ்களை தமிழக போக்குவரத்து துறை அறிவித்திருக்கிறது. வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த தினத்தையொட்டி சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 1,460 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.. அதில், "வரும் 25, 26 தேதிகள் வார இறுதி நாட்கள்(சனி, ஞாயிறு - முகூர்த்த தினம்) என்பதால் சென்னையில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேருந்துகள்: இதைக்கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 24 ம் தேதியும், நாளை 25ம் தேதியும், 1,130 பேருந்துகள் மற்றும் சென்னை, கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி,ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 130 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சிறப்பு பஸ்கள்: மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 1,460 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பேருந்துகளில் www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர். தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் பயணிக்க 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவுசெய்துள்ளனர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications