கோயம்பேடு தந்த சர்ப்ரைஸ்.. 2 மாசத்துக்கு கவலையில்லை.. காய்கறி விலை பார்த்ததுமே இல்லத்தரசிகள் ஹேப்பி
சென்னை: கோயம்பேடு மொத்த வியாபார கடைகளில் காய்கறிகளின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் கிலோ ரூ.10-க்கு விற்கப்பட்டு வருகிறது. ஆனால், காய்கறி வியாபாரிகள் பெரும் கவலையில் ஆழ்ந்து வருகிறார்கள்.
தமிழகத்தில் பனிக்காலம் முடிந்து கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், சாதகமான தட்பவெப்பநிலை காரணமாக காய்கறிகள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்து, அவற்றின் விலை குறைந்துள்ளது.

காய்கறிகள் விலை
இதன் காரணமாக காய்கறிகள் உற்பத்தி உயர்ந்து, கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்தும் அதிகரித்துள்ளது. வரத்து அதிகமாக உள்ளதால் விலையும் குறைந்து காணப்படுகிறது.
அந்தவகையில், கத்தரிக்காய், நூக்கல், அவரைக்காய், பீட்ரூட் தலா ரூ. 10 அளவிற்கு குறைந்துள்ளது.. முட்டைக்கோஸ், முள்ளங்கி தலா 8 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு, புடலங்காய், கேரட் தலா 15 ரூபாய்க்கும், வெண்டைக்காய், பாகற்காய் கிலோ 20 ரூபாய்க்கும், பீன்ஸ் ரூ. 25, பெரிய வெங்காய் 18 ரூபாய்க்கு கோயம்பேட்டில் விற்பனையாகி வருகிறது. சின்ன வெங்காயம் ரூ.30-க்கு விற்பனையாகி வருகிறது.
கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.100-க்கு மேல் விற்கப்பட்டு வந்த முருங்கைக்காய் இப்போது கிலோ ரூ.40 ஆக விலை குறைந்துள்ளது. இது ஓட்டல் உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
தக்காளி விலை குறைந்தது
இதில் தக்காளியை பொறுத்தவரை, கடந்த வருடத்திலிருந்தே விலையில் கலக்கத்தை தந்து கொண்டிருந்தது.. கிலோ ரூ.100-க்கு மேல் தக்காளி விற்கும் சூழல் வந்தது.. கூட்டுறவுத்துறை மூலம் தக்காளி ஓரளவு குறைவான விலைக்கு விற்கப்பட்டாலும், அனைவராலும் இந்த தக்காளியை வாங்க முடியவில்லை.. கடந்த ஜனவரிக்கு பிறகுதான் தக்காளி விலையில் மாற்றம் தென்பட்டது.
இப்போது கிலோ ரூ.15-க்கும் வெளிச்சந்தைகளில் 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.. ஆனால், கிருஷ்ணகிரி, தேனி, ஒட்டன்சத்திரம், ஓசூர் ஆகிய பகுதிகளில் கிலோ 5 ரூபாய்க்கு கீழே விற்பனையாகிறது.. இதனால், பறிக்கும் கூலிகூட தங்களுக்கு கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வியாபாரிகள் கவலை
இது தொடர்பாக காய்கறி வியாபாரிகள் கூறும்போது, "பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை காய்கறிகள் உற்பத்தி அதிகரிக்கும் என்பதால், காய்கறிகள் வரத்தும் கோயம்பேட்டுக்கு அதிகமாகவே இருக்கும்.
வரத்து அதிகமாக இருக்கும்போது, காய்கறிகள் விலையும் குறைந்தே இருக்கும். ஆனால், கோடை வெப்பம் காரணமாக, மீண்டும் காய்கறி விலைகள் வரும் மே மாதத்தில் உயர வாய்ப்புள்ளது. எனவே இதனை இல்லத்தரசிகள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்
2 மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.50க்கு விற்கப்பட்ட காய்கறிகளின் விலை, தற்போது கிலோ ரூ15 -20 க்கு விற்கப்படுவதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, மற்ற வியாபாரிகளும் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் கோடை காலத்தில், கோயம்பேடு மார்க்கெட்டில், காய்கறிகள் விலை டபுள் மடங்காக உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications