வருமானமே போச்சு.. வெறிச்சோடிய கோயம்பேடு.. கண்ணீர் வடிக்கும் வியாபாரிகள்!
சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தை மாற்றியதால், தங்களின் வருமானமே போய்விட்டது என்று புலம்புகிறார்கள் வியாபாரிகள்.
2கே கிட்ஸுக்கு தெரியாத ஒரு விசயம் என்னவென்றால் 2000 ஆம் ஆண்டுக்கு முன்னால் கோயம்பேடு என்று ஒரு பேருந்து நிலையமே இருக்கவில்லை. அந்தக் காலத்தில் பாரிஸ் பூக்கடை பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டுதான் சென்னை தலைநகரின் முக்கிய பேருந்து நிலையமாக இருந்தது.

அந்தப் பகுதியில் ஏற்பட்ட இடப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக அன்றைய முதல்வர் மு.கருணாநிதிதான் கோயம்பேடு பேருந்து நிலையம் என்ற ஒன்றைக் கட்டினார்.
ஆனால் கட்டி முடிப்பதற்குள் அவரது ஆட்சிக்காலம் முடிந்துவிட்டது. அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அதனைத் திறந்துவைத்தார். அவரது பெயரில் பெரிய பெயர்ப் பலகை கோயம்பேட்டில் வைக்கப்பட்ட போது பெரிய சர்ச்சை எழுந்தது.

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் ஜெயலலிதா தனது பெயரைப் பிரம்மாண்டமாக வைத்துள்ளார் என விமர்சனங்கள் எழுந்தன. அதன்பிறகு மீண்டும் ஆட்சிக்கு திமுக வந்ததும் கூட அந்தச் சர்ச்சை ஓயவில்லை.
அதனால், பழைய பெயர்ப் பலகைக்குப் பக்கத்திலேயே மு.கருணாநிதியின் பெயரைத் தாங்கிய பெயர்ப் பலகை புதியதாக அமைக்கப்பட்டது.
இப்போது அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குக் கலைஞர் பெயரை வைத்துள்ளனர். அதை அதிமுகவினர் சிலர் விமர்சித்து வருகின்றனர். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

கோயம்பேடு பேருந்து நிலையம் என்று திறக்கப்பட்டதோ அன்று முதல் இரவு 2 மணிகூட பரபரப்பாக இயக்கி வந்த பாரிஸ் பகுதி, ஆள்கள் நடமாட்டமே இல்லாத இடமாக மாறியது.
ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் வியாபாரம் செய்து வந்து பெரிய பெரிய கடைகள் எல்லாம் தங்களின் வியாபாரத்தை முழுமையாக இழந்தனர். ஆயிரக்கணக்கான நடைபாதை வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

அன்றைக்கு கோயம்பேட்டில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தைப் போல் ஆசிய அளவில் வேறு ஒரு பேருந்து நிலையம் இல்லை எனப் பெருமை பேசினார்கள். ஆனால் அந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்ட 22 ஆண்டுகளில் அதன் பயன்பாடு தேவையற்றதாக மாறி இருக்கிறது.
முதலில் தென் தமிழ்நாட்டுக்குத் தேவையான பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்றனர். பெங்களூர், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு கோயம்பேட்டிலிருந்து வழக்கம் போல் பேருந்து இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
ஆனால், இப்போது அதற்குச் சிக்கல் உருவாகி உள்ளது. இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்தப் பேருந்து நிலையம் தனது சேவையை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள உள்ளது என்று கூறி இருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், "கோயம்பேடு பேருந்து நிலையத்தைப் பொறுத்தளவில் 30% பேருந்துகள் இன்னும் 1 ஆண்டுகாலம் வரை இயக்கப்படும்.
அதன்பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதலுடன் மிகப்பெரிய ஒரு திட்டத்தை அங்கே கொண்டுவர உள்ளோம். அதற்கு உண்டான கருத்துருக்கள் பெறப்பட உள்ளன. அதன்பின்னர் அதன் அடிப்படை வேலைகள் தொடங்கப்படும்" என்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

ஆக, முதலில் தென் தமிழ்நாட்டுக்கு மட்டுமான பேருந்து பயணிகளை மட்டும் இழந்த கோயம்பேடு விரைவில் தனது சேவையையே நிறுத்திக் கொள்ளது. இதனால் இத்தனை ஆண்டுகளாக கோயம்பேடு பயணிகளை நம்பி தொழில் செய்து வந்த வியாபாரிகள் கவலையில் மூழ்கிப் போய் உள்ளனர்.
இந்தப் பேருந்து நிலையம் மாற்றப்பட்டதால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்டோ தொழிலாளர்கள்தான். இந்தக் கோயம்பேட்டில் பிரீ பெய்டு ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டுமே 475 பேர் உள்ளனர். மேலும் சப் ப்ரீ பெய்டு என்று 400 ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளனர்.
இவை மட்டும் இல்லாமல் கோயம்பேடு பேருந்து நிலையத்தைச் சுற்று ஒவ்வொரு பகுதியிலும் பல ஆட்டோ ஸ்டாண்டுகள் உள்ளன. அவர்களையும் கணக்கிட்டால் 3 ஆயிரம் பேர் வருவார்கள். அவர்கள் அனைவரும் இத்தனை ஆண்டுகளாகப் பார்த்து வந்த வருமானம் ஒரே நாளில் முற்றாக நின்றுள்ளது.

அதனால் ஆட்டோவை வங்கிக் கடன்பெற்று வாழ்க்கை நடத்தி வந்தவர்கள் உட்படத் தினக்கூலிகளாக இருந்த பல தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புலம்புகிறார்கள் அவர்கள்.
ஆகவே, கோயம்பேட்டில் உள்ள ஆட்டோக்களை இனிமேல் கிளாம்பாக்கத்தில் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.
இவர்களைப் போலவே கோயம்பேடு உள்ளே கடைகள் நடத்தி வந்தவர்கள் அடுத்து தங்களின் வாழ்க்கை எப்படிப் போகும் என்று திகில் பிடித்து உட்கார்ந்துள்ளனர்.
மேலும் இந்தச் சுற்றுவட்டாரத்தில் உள்ள வணிகவளாகங்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், கல்யாண மண்டபங்கள், ஆடையகங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் என எல்லோரும் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.
பழைய மாதிரி இனி பயணிகள் வரப் போவதில்லை. இருக்கும் பயணிகளும் ஒரு ஆண்டுக்குப் பிறகு வரப் போவதில்லை எனவே அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் போட்டுக் கடை நடத்தி வருபவர்கள் எல்லோரும் கடை விரித்தேன் கொள்வார் இல்லை என்று கண்ணீர் வடிக்கத் தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications