கிளாம்பாக்கத்திற்கு பதில் மீண்டும் கோயம்பேடு? முதல்வர் விஜய்க்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடிதம்
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையான வசதியையும் எளிதான அணுகலையும் வழங்கவில்லை என்பது பயணிகளின் கருத்தாக உள்ளது. தற்போது, சென்னையிலிருந்து கிளாம்பாக்கம் செல்ல பயணிகள் தனியார் வாகனங்கள், கூடுதல் அரசு மாநகரப் பேருந்துகளை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே தென் மாவட்ட பேருந்துகளை மீண்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் ஒரு நாளில் 3000 வெளியூர் பேருந்துகள் வந்து சென்றன. இதனால் தினமும் காலை மற்றும் மாலையில் ஆம்னி பேருந்துகளாலும், அரசு பேருந்துகளாலும் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னைக்கு வெளியே தாம்பரத்தில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் கட்டுமான பணிகள் தொடங்கின. இந்த பணிகள் ஸ்டாலின் ஆட்சி காலத்தில் நிறைவு பெற்றது.

அப்போதுதான் பேருந்து நிலையம் அமைந்துள்ள ஊர் கிளாம்பாக்கம் என்பதே மக்களுக்கு தெரியும். ஏனெனில் வண்டலூர், ஊரப்பாக்கமே மக்களுக்கு தெரியும். பேருந்து நிலையம் வந்ததால் கிளாம்பாக்கம் என்ற அடையாளமே வெளியில் தெரிந்தது. கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தில் தான் அரசு பேருந்துகள் இயங்குகின்றன. ஆனால் ஆம்னி பேருந்துகள் வேளச்சேரியை தலமாக ஒரு கொண்டு கணிசமான பேருந்துகள் ஓஎம்ஆர் சாலையை சுற்றி சென்னையில் பாதி மக்களை ஏற்றி செல்கின்றன.
மறுபுறம் கோயம்பேடுவை மையமாக கொண்டு கணிசமான பேருந்துகள் இயங்குகின்றன. இதில் வேளச்சேரி வழி பேருந்துகள் சென்னை மாநகருக்குள் செல்கின்றன.ஆனால் கோயம்பேடு பேருந்துகள் சென்னைக்குள் செல்லாமல் போரூர் பைபாஸ் வழியாக செல்கின்றன. எனினும் முழுமையாக அனைத்து ஆம்னி பேருந்துகளும் செல்வது இல்லை.. இந்த சூழலில் பழைய படி, தென் மாவட்ட பேருந்துகளை மீண்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வர் விஜய்க்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுபற்றி அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்க்கு எழுதிய கடிதத்தில் கூறுகையில், "சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்ப தற்கும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டது.
ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையான வசதியையும் எளிதான அணுகலையும் வழங்கவில்லை என்பது பயணிகளின் கருத்தாக உள்ளது. தற்போது, சென்னையிலிருந்து கிளாம்பாக்கம் செல்ல பயணிகள் தனியார் வாகனங்கள், கூடுதல் அரசு மாநகரப் பேருந்துகளை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
இதனால் நேர விரயமும் போக்குவரத்து நெரிசலும் சுற்றுச்சூழல் மாசுபாடும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நகரின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளிலிருந்து வரும் பயணிகள் 2 மணி நேரத்துக்கும் மேலாக பயணம் செய்து கிளாம்பாக்கம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு மெட்ரோ ரயில், மின்சார ரயில் இணைப்புகள் இதுவரை முழுமையாக செயல்படுத்தப்படாததால், மக்கள் அதிக சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
கோயம்பேடு பேருந்து நிலையம் சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து மற்றும் பிற பொதுப் போக்குவரத்து வசதிகள் போதுமான அளவில் உள்ளன.
சென்னையின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பயணிகள் எளிதாக கோயம்பேடு வந்தடைந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்ய முடியும். சென்னை நகருக்குள் தினசரி பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை மற்றும் ஐ.டி. நிறுவனங்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.ஆனால் வெளியூருக்கு செல்லும் பேருந்துகள் சுமார் 3,000 மட்டுமே இயக்கப்படுகின்றன. எனவே வெளியூர் பேருந்துகள்தான் சென்னை போக்குவரத்து நெரிசலுக்கான முக்கிய காரணம் என்ற கருத்து சரியல்ல.
எனவே, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தும் அரசுப் பேருந்துகள் மற்றும் தென் மாவட்ட சேவைகளை மீண்டும் இயக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று, பயணிகள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம் " இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications