சசிகலாவுக்கு இனி அதிமுகவில் இடமில்லை... எந்தச் சூழலிலும் கட்சிக்குள் நுழைய முடியாது -கே.பி.முனுசாமி
சென்னை: சசிகலாவுக்கு இனி அதிமுகவில் இடமில்லை என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
சசிகலா விடுதலைக்கு பிறகு அதிமுகவிலோ, அரசியலிலோ எந்த தாக்கமும் ஏற்படாது என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மேலும், எந்தச் சூழலிலும் சசிகலாவால் இனி கட்சிக்குள் நுழையமுடியாது என்றும் தன்னை பொறுத்தவரை ஜெயலலிதாவின் உதவியாளர் அவர் எனவும் தெரிவித்திருக்கிறார்.

சசிகலா விடுதலை
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா விரைவில் விடுதலையாக உள்ளார் என தகவல்கள் பரவி வருகின்றன. சசிகலா வருகைக்கு பிறகு அது அரசியல் ரீதியாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படும் நிலையில் அதனை திடமாக மறுத்து அதற்கான வாய்ப்பு துளியளவும் இல்லை என கூறியிருக்கிறார் அதிமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும் எம்.பி.யுமான கே.பி. முனுசாமி. செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் இதைக் கூறியுள்ளார்.

கே.பி.முனுசாமி
மேலும் அதிமுகவில் இனி பிளவு என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்றும் சசிகலாவை ஒதுக்கியது ஒதுக்கியது தான் இனி மீண்டும் அவர் கட்சிக்குள் நுழைய வாய்ப்பே கிடையாது எனவும் தெரிவித்திருக்கிறார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவரது கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு சசிகலா மீது ஏன் பரிவு காட்ட வேண்டும் என வினவியுள்ளார். அமமுக-அதிமுக இணைப்பு என்பது ஒரு போதும் நடைபெறாது எனவும் தெரிவித்திருக்கிறார்.

டாக்டர் ஐயா
அதிமுகவுடன் பாமக, தேமுதிக கூட்டணியில் நீடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறிய கே.பி.முனுசாமி, அன்புமணி முதலமைச்சராக வேண்டும் என்ற ராமதாஸின் ஆசையில் தவறில்லை எனத் தெரிவித்துள்ளார். தன் பிள்ளை முதலமைச்சராக வர வேண்டும் என டாக்டர் ஐயா விரும்புவது ஒரு தந்தைக்கு உரிய ஆசையாக இருக்கலாம் எனத் தெரிவித்தார். மேலும், அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை ராமதாஸ் வழங்கி வருவதாக புகழாரம் சூட்டினார்.

தலைமை முடிவெடுக்கும்
மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது பற்றி தனக்கு எந்த தகவலும் தெரியாது என்றும் இது பற்றி தலைமை தான் முடிவெடுக்கும் எனக் கூறியுள்ளார். தன்னை பொறுத்தவரை மக்களால் தேர்வு செய்யப்படாமல் மாநிலங்களவை மூலம் எம்.பி.யாகி உள்ளதால் மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்க்கவும் இல்லை அதை கேட்கப் போவதுமில்லை எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications