ஓபிஎஸ்- இபிஎஸ்ஸுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. புதுவையை உதாரணம் காட்டி போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு!
சென்னை: முன்னாள் முதல்வர்கள் ஓ பன்னீர் செல்வத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் எதிராக அதிமுகவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
சசிகலாவை அதிமுகவில் சேர்க்கக் கோரி தேனியில் பெரியகுளத்தில் ஓபிஎஸ் பண்ணை வீட்டில் கட்சியினர் அவர் முன்பே தீர்மானம் நிறைவேற்றினர். இதனால் அதிமுகவில் மீண்டும் சலசலப்பு எழுந்துள்ளது.
சசிகலாவுக்கான ஆதரவுக் குரல் நாளுக்கு நாள் வலுக்கிறது. அதே நேரம் ஓபிஎஸ்- எடப்பாடி பழனிச்சாமிக்கான எதிர்ப்பும் கூடிக் கொண்டே செல்கிறது. இதற்கு காரணம் தொடர் தேர்தல் தோல்வி என கூறப்படுகிறது.

தொடர் தோல்வி
நாடாளுமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல், நகர்ப்புற தேர்தல் என தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வருகிறது அதிமுக. அதாவது ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவுக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் தோல்வி அடையும் போதெல்லாம் இரட்டை தலைமைகள் கூட்டாக அறிக்கை விடுவர்.

மனம் துவள வேண்டாம்
அதில் தொண்டர்கள் மனம் துவள வேண்டாம் என்றெல்லாம் ஆறுதல் அளிக்கும் வகையில் கூறினாலும் தொடர் தோல்வி என்பதை தொண்டர்களால் ஏற்க முடியாது. தற்போது கட்சி வேறு கரைந்து கொண்டே செல்கிறது. இதனால் கொஞ்சம் நஞ்சம் உள்ள கட்சியினரை தக்க வைத்துக் கொள்ள அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

ஓபிஎஸ்- ஈபிஎஸ்ஸுக்கு வலுக்கும் எதிர்ப்பு
ஓபிஎஸ்- ஈபிஎஸ்ஸுக்கு எதிராக கிருஷ்ணகிரியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம், புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வளர்க்கப்பட்ட இயக்கம், புரட்சித் தலைவி சின்னம்மா அவர்களால் பாதுகாக்கப்பட்ட இயக்கம் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் கட்சியை கைப்பற்றி தொடர் தோல்விக்கு காரணமான ஓபிஎஸ் ஈபிஎஸ் கட்சியின் நலன் கருதி விலக வேண்டும்.

கட்சியை காலி செய்ய சதி
ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டசபை தேர்தலிலும் கிராமப்புற உள்ளாட்சி தேர்தலிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வி அடைந்துள்ளது. புதுவை மாநில கட்சி அடியோடு காணாமல் போய்விட்டது. அதை போன்று தமிழகத்திலும் கட்சியை காலி செய்வதற்கு சிலர் சதி செய்து கொண்டிருக்கிறார்கள்.
Recommended Video

மாற்றுக் கட்சியில் 50 லட்சம் தொண்டர்கள்
சுமார் 50 லட்சம் தொண்டர்கள் கட்சியை விட்டு மாற்றுக் கட்சிக்கு சென்றுவிட்டார்கள். சுமார் 50 லட்சம் தொண்டர்கள் எந்த கட்சியையும் ஆதரிக்காமல் நடுநிலை வகிப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. அம்மாவின் விசுவாசிகள் பொறுமை காக்க வேண்டும். சின்னம்மா அவர்கள் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று கட்சியை ராணுவ கட்டுப்பாட்டுடன் வழி நடத்த வேண்டும் என அந்த போஸ்டர் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications