நீங்க தான் மாவட்டச் செயலாளர்கள்கிட்ட சொல்லனும்... ஸ்டாலினிடம் கே.எஸ்.அழகிரி கோரிக்கை
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுக்கு உரிய எண்ணிக்கையில் இடம் கொடுக்குமாறு திமுக மாவட்டச் செயலாளர்களிடம் எடுத்துக்கூறுங்கள் என ஸ்டாலினிடம் கே.எஸ். அழகிரி கோரிக்கை வைத்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை ஸ்டாலினை சந்தித்து பேசிய போது அவர் இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.
அதைக் கேட்ட ஸ்டாலின், வெற்றிவாய்ப்பு அடிப்படையிலேயே மாவட்டச் செயலாளர்கள் முடிவெடுக்கிறார்கள் என்றும், இருப்பினும் நீங்கள் கூறியதற்காக அதுபற்றி தாமும் பேசுவதாக தெரிவித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சி
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் செக் வைத்துள்ளனர். மாவட்டங்களில் ஒற்றை இலக்க எண்ணில் காங்கிரசுக்கு போட்டியிட வாய்ப்பு தரப்படுவதால் அதனை ஏற்க விரும்பாமல் தவிக்கிறது தமிழக காங்கிரஸ் கமிட்டி.

உறுதியில்லை
இந்நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் மீதுள்ள அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காக மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய கே.எஸ்.அழகிரி தனது உள்ளக் குமுறலைக் கொட்டியுள்ளார். அதனை பொறுமையுடன் கேட்டுக்கொண்ட ஸ்டாலின், அழகிரி மனம் குளிரும் வகையில் எந்த உறுதியையும் அளிக்காமல் மற்ற விவகாரங்களை பற்றி பேசி அனுப்பி வைத்துள்ளார்.

காங்கிரஸ் தகுதி
ஒன்றியப் பதவிகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட மாவட்டத்தில் 8 முதல் 10 வரையிலான இடங்களே கொடுக்கப்படுகின்றன. இதனை ஏற்க கவுரவம் பார்க்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் இது தொடர்பான புகார்களை சத்திய மூர்த்தி பவனுக்கு அனுப்பி வைத்த வண்ணம் உள்ளனர். இதனால் ஆதங்கம் அடைந்த அழகிரி இது தொடர்பான தகவலை முகுல் வாஸ்னிக்குக்கு அனுப்பியுள்ளார். அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை.

எடுபடவில்லை
மு.க.ஸ்டாலினிடம் தாம் மட்டும் பேசினால் அது வேலைக்கு ஆகாது எனத் தெரிந்து, திமுகவுடன் இணக்கமாக இருந்த தங்கபாலுவையும் நேற்று அழைத்துச் சென்றிருந்தார் கே,எஸ்.அழகிரி. ஆனால் அப்போதும் கூட அவர் நினைத்தது ஸ்டாலினிடம் நடக்கவில்லை.












Click it and Unblock the Notifications