ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன்.... நெகிழும் தந்தை குமரி அனந்தன்!
சென்னை: தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டதற்கு அவரது தந்தையும் முதுபெரும் காங்கிரஸ் தலைவருமான குமரி அனந்தன் நெகிழ்ச்சியுடன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனை தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். தமிழிசைக்கு ஆளுநர் பதவி கிடைத்துள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

லண்டனில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழிசையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். துணை முதல்வர் ஓபிஎஸ்,தமது ட்விட்டர் பக்கத்தில் தமிழிசைக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
இதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோரும் தமிழிசைக்கு வாழ்த்து கூறியுள்ளார். தமிழிசை நியமனம் தொடர்பாக அவரது தந்தையும் முதுபெரும் காங்கிரஸ் தலைவருமான குமரி அனந்தன் கூறியதாவது:
தமிழிசையின் உழைப்புக்குக் கிடைத்த பரிசு இது. ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் என்ற திருக்குறள் படி பெருமை சேர்த்துள்ளார் தமிழிசை. இவ்வாறு குமரி அனந்தன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications