"நடனம் தெரியாது ஏனா தரை சரி இல்லனு சொல்வாங்கல்ல.."! தமிழக பட்ஜெட்டை டேட்டாவுடன் விமர்சித்த குஷ்பு
சென்னை: தமிழக அரசின் 2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் குறித்து நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு சுந்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
2024- 2025 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை நேற்றைய தினம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை திமுக கூட்டணி கட்சிகள் பாராட்டியும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தும் உள்ளன.

அந்த வகையில் நடிகை குஷ்பு தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஹிந்தியில் ஒரு பழமொழி இருக்கிறது, அதாவது நடனம் தெரியாது எனா தரை சரி அல்ல (ஆடத் தெரியாதவருக்கு மேடை கோணல் என்பதைத்தான் குஷ்பு அப்படி சொல்லுகிறார்). தனது தோல்விகளை அடுத்தவர் தலையில் கட்டுவதுதான் முதல்வர் ஸ்டாலினின் தலைமையில் செயல்படும் திமுக அரசின் புதிய பார்முலாவாகும்.
தமிழக பட்ஜெட்டில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதுவுமே இல்லை. இந்த பட்ஜெட்டில் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே அனைத்து அம்சங்களும் இடம் பெற்றிருந்தன. ஒரு மாநிலமானது மக்களுக்கு செலவு செய்ய நிதி வைத்திருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தை பொருத்தமட்டில் கடனை பெற்று, தற்போது மொத்த கடன் ரூ 8.33 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த கடனை தமிழக அரசு எப்படி அடைக்க போகிறது என்பது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. உங்கள் (திமுக அரசு) தவறுகளுக்கு மத்திய அரசை குற்றம்சாட்டுவது உங்களின் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது. தமிழகத்தில் மத்திய அரசு நிறைய நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. நிதித் துறை ஆணையத்தின் பரிந்துரையின்படி 2014- 2015 ஆம் ஆண்டு முதல் 2023- 2024 ஆம் ஆண்டு கால கட்டம் வரை வரி பகிர்வாக தமிழகத்திற்கு ரூ 2.88 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
அதே காலகட்டத்தில் தமிழகத்திற்கு 2.58 லட்சம் கோடியை நிதியுதவியாகவும் வழங்கியுள்ளது. நிதித் துறை ஆணையத்தின் பரிந்துரைகளை தவிர்த்து பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் உள்கட்டமைப்புக்கான மூலதன செலவு ரூ 6,412 கோடியை மத்திய அரசு அளித்துள்ளது. இந்த தொகை எந்தவித வட்டியும் இல்லாமல் அடுத்த 50 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு திருப்பி செலுத்தப்பட வேண்டிய நிதியாகும்.

எனவே இந்த நிதி, அந்த நிதி என எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் தமிழகத்திற்கு ரூ 6.96 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. ஆனால் நேரடி வரி, கார்ப்பரேட் வரியின் மூலம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2022- 2023 ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் பங்களிப்பு வெறும் ரூ. 6.23 லட்சம் கோடியாகும். அதாவது தமிழகத்திலிருந்து பெற்றதை விட மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதி அதிகமாகவே உள்ளது.
தற்போது திமுக அரசு குற்றம்சாட்டுவது ஜிஎஸ்டி பணத்தை திருப்பி தரவில்லை என்பதுதான். அந்த பாயிண்டுக்கு வருகிறேன்! அதாவது மாநிலங்களிலிருந்து வருமானமாக கிடைக்கும் ஜிஎஸ்டியில் 100 சதவீதமும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (மாநிலம்+மத்திய) வரவில் 50 சதவீதமும், மத்திய ஜிஎஸ்டியில் 41 சதவீதமும் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் பிரித்து கொடுக்க வேண்டும் என்பதுதான் நிதித் துறை ஆணையத்தின் பரிந்துரையாகும்.
அதன்படி பார்த்தோமேயானால், கடந்த 2022- 2023 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு ஜிஎஸ்டியாக ரூ 36,353 கோடி ரூபாயும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மூலம் ரூ 32,611 கோடியும் மத்திய ஜிஎஸ்டியில் இருந்து 27,360 கோடியும் கிடைக்கப்பெற்றுள்ளது.
தமிழகத்திற்கு ஜிஎஸ்டி வரி மட்டுமா கிடைத்துள்ளது, செஸ் வரியும்தான். 2014- 2015 ஆம் ஆண்டு முதல் 2023- 2024 ஆம் ஆண்டு வரை செஸ் வரியாக தமிழகத்திற்கு ரூ 57,557 கோடி கிடைக்கப் பெற்றுள்ளது. அந்த மொத்த நிதியில் சாலையை அமைத்ததற்காக ரூ 37,965 கோடி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் பள்ளிகளின் பயன்பாட்டிற்காக ரூ 11,116 கோடியும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ 4,839 கோடியும் பிரதமரின் கிராம சாலை திட்டத்திற்கு (பிரதமரின் கிராம சத்க் யோஜனா ) ரூ 3,374 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தின் நிதியை மத்திய அரசு பாக்கி வைத்திருக்கவில்லை, ஆனால் அவை மக்கள் நலனுக்காக செலவிடப்பட்டுவிட்டது என்பது நன்றாகவே தெரிகிறது. திமுக ஆட்சியில் குடும்ப ஆட்சியும், ஊழலும், தங்கள் கஜானாவை நிரப்பவதும் அதிகமாக இருக்கும் வரை ஏழைகள் எப்போதும் ஏழைகளாகவே இருப்பர். முடிந்த வரை பணத்தை சுருட்டுவதுதான் திமுக அரசின் நிர்வாக திறன். எனவே தமிழக மக்களுக்கு சேவையாற்றுவதிலிருந்து முதல்வர் ஸ்டாலின் தோல்வி அடைந்துவிட்டார். இவ்வாறு நடிகை குஷ்பு புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications