உங்களுக்கு தரப்பட்ட மரியாதை நினைவிருக்கிறதா குஷ்பு? தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி கடும் பதிலடி
சென்னை: கட்சிமாறிய சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்த காங்கிரஸ் பேரியக்கம் மீது சேற்றை வாரி இறைக்க தொடங்கியிருக்கிறார் குஷ்பு. காங்கிரசில் இணைந்தபோது என்னென்ன மரியாதை எல்லாம் தரப்பட்டது என்பது நினைவிருக்கிறதா? என்று தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி ஆர்.சுதா பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த குஷ்பு, பாஜகவின் மாநில தலைமையகமாக கமலாலயத்தில் கடந்த இரண்டு நாள் முன்பு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில்அளித்து பேசினார்.
அப்போது அவர் தன்னை நடிகையாக மட்டும் பார்த்ததாக சொன்ன கேஎஸ் அழகிரிக்கு கடும் பதில் கொடுத்தார். காங்கிரிஸ் தரப்பினர் வைத்த குற்றச்சாட்டுக்கும் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
கடும் விமர்சனங்களால் தர்மசங்கடத்தில் குஷ்பு.. ஆதரவு கரம் நீட்டிய பொன் ராதாகிருஷ்ணன்!
குஷ்பு பேட்டி
காங்கிரசைப் பொறுத்தவரை என்னை எந்தக் கூட்டத்திற்கும் கூப்பிட்டது கிடையாது. பேப்பரைப் பார்த்தவுடன்தான் எனக்கு கூட்டம் நடப்பது தெரியும்.. அக்டோபர் 5ஆம் தேதி ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டேன். டெல்லியில் இருந்து கேட்டுக்கொண்டார்கள் என்பதால் அதில் கலந்துகொண்டேன். இருக்கும் இடத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த விசுவாசத்தைக்காட்டிவிட்டுதான் வெளியில் வந்தேன்.
அண்ணாத்தே
கட்சி கூட்டத்திற்குக் கூப்பிட்டால் ஷூட்டிங்கில் இருப்பதாக சொன்னதாக புகார் கூறுகிறார்கள்., "அண்ணாத்தே படத்தின் ஷூட்டிங் சென்ற ஆண்டு நடந்தது.. அதுவும் 20 நாட்கள்தான் எனக்கு ஷூட்டிங்.அதையும் ஐந்தைந்து நாட்களாக பிரித்து நடித்தேன். ஒரு மாதத்தில் ஐந்து நாட்களைத் தவிர மீதமிருந்த 25 நாட்களில் என்னைக் கூட்டத்திற்கு அழைத்திருக்கலாமே" என்றார். . இன்றைக்கு காங்கிரஸ் எதிர்க்கும் திட்டங்கள் பலவற்றை ஆரம்பித்தது அந்தக் கட்சிதான் என்றும் குஷ்பு குற்றம்சாட்டினார்.
நினைவிருக்கிறதா உங்களுக்கு
குஷ்புவுக்கு தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி ஆர்.சுதா பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கட்சிமாறிய சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்த காங்கிரஸ் பேரியக்கம் மீது சேற்றை வாரி இறைக்க தொடங்கியிருக்கிறார் குஷ்பு. காங்கிரசில் இணைந்தபோது என்னென்ன மரியாதை எல்லாம் தரப்பட்டது என்பது நினைவிருக்கிறதா? ஆனால், பத்தோடு பதினொன்றாக உங்களை இணைத்த கட்சிக்காகவா தொண்டர்களின் இயக்கமான காங்கிரசை பழிக்கிறீர்கள்? எல்லா காலகட்டத்திலும் எங்களை போன்றவர்களின் உழைப்பிற்கு காங்கிரஸ் கட்சி அங்கீகாரம் வழங்கியிருக்கிறதே தவிர ஒதுக்கியதில்லை, ஒடுக்கியதில்லை.
நிறுத்துங்கள் குஷ்பு
சில மேகங்கள் விலகும்போது வானம் இன்னும் அழகாகவே காட்சி தரும். துரோகிகள் வெளியேறுவதால் காங்கிரஸ் இயக்கம் நிச்சயம் வலிமை பெறும். குஷ்பு ஆறு ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்ததை மனசாட்சியோடு நினைவுகூர்ந்து விமர்சனங்களை நிறுத்திக் கொள்ளவேண்டும். விமர்சனங்கள் தொடர்ந்தால் உரிய பதிலடி கிடைக்கும் என்பதை எச்சரிக்கையாக கூற விரும்புகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.